யார் இந்த தக்ஷி?
குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தியின் கைது விசாரணைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அவருடன் இணைந்து நேபாளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தக்ஷி என்ற இளம்பெண்ணின் சம்பவம் தற்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தகவலின்படி, தக்ஷி சிங்களம் பேசத் தெரியாதவர். இதனை சாதகமாக பயன்படுத்தி, இஷாரா செவ்வந்தி கும்பல் அவரை தங்களது நடவடிக்கைகளில் தற்செயலாக ஈடுபடுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, தற்போது விசாரணைக்காக பல இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகிறார். நேற்று, அவர் பதுங்கியிருந்ததாகக் கூறப்படும் கிளிநொச்சி பகுதிக்கு விசாரணை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில், செவ்வந்தியைப் போன்ற தோற்றமுடைய ஒரு பெண்ணை தேடுமாறு கெஹல்பத்தர பத்மேவ், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற நபருக்கு உத்தரவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் பேரில், சுரேஷ் தக்ஷியைத் தேர்வு செய்தார். தக்ஷி இந்தக் குழுவுடன் நேரடி தொடர்பு இல்லாதவராக இருந்தாலும், செவ்வந்திக்கான ‘டம்மி’ (நிழல் முகம்) தேவைப்பட்டதால், ஜேகே பாய் என்ற இடைத்தரகரின் மூலம் இந்தப் பொறுப்பு சுரேஷிடம் வழங்கப்பட்டதாக விசாரணை கூறுகிறது.
சுரேஷ், தக்ஷிக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கச் செய்கிறோம் என்ற பெயரில் அவரை ஏமாற்றி, நேபாளத்துக்கு அழைத்துச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தக்ஷிக்கு உண்மையான நோக்கம் தெரியாமலேயே, அவர் நேபாளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் நேபாளத்தில், இஷாரா செவ்வந்தி கைது செய்யப்படும் போது, தக்ஷியும் வேறு இடத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனுடன், சஞ்சீவ கொலைக்குப் பின் செவ்வந்தி தங்கி இருந்த அனைத்து இடங்களும் தற்போது பொலிஸாரால் ஆய்வு செய்யப்படுகின்றன.

You must be logged in to post a comment.