Local

இலங்கையில் மெனிஞ்சைடிஸ் வைரஸ் தொற்றுடன் 237 பேர் அடையாளம்

நாட்டின் பல பகுதிகளில் மெனிஞ்சைடிஸ் வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 237 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

நோய் பரவுவதைத் தடுப்பதற்காக, சுத்தமான குடிநீரைப் பயன்படுத்துமாறும், இயலுமானவரை எப்போதும் கொதித்தாறிய நீரைக் அருந்துமாறும் சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த சமூக சுகாதார விசேட வைத்திய நிபுணர் துஷானி தாபரேரா, தற்போது பதிவாகும் நோயாளர்களில் பெரும்பாலானோர் வைரஸ் தொற்று காரணமாக ஏற்படும் மெனிஞ்சைடிஸ் நோயாளர்களே எனக் குறிப்பிட்டார்.

இந்த நோய்த்தொற்று முதன்முதலில் ஏப்ரல் 15ஆம் திகதி மாத்தறை மாவட்டத்தின் தெனியாய பகுதியில் கண்டறியப்பட்டது.

பின்னர் ரிகில்லகஸ்கட, கண்டி, பதுளை, வெலிமடை மற்றும் தியத்தலாவ ஆகிய பகுதிகளிலும் நோயாளர்கள் பதிவானதாக அவர் கூறினார்.

பதிவாகியுள்ள நோயாளர்களில் பெரும்பான்மையானோர் பாடசாலை மாணவர்கள் என்றும், நேற்று (31) மாலை நிலவரப்படி 59 நோயாளர்கள் மாத்திரமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், ஏனைய அனைவரும் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காய்ச்சல், தலைவலி மற்றும் வாந்தி ஆகியன இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும்.

பொதுவாக மெனிஞ்சைடிஸ் வைரஸ் நோயில் இருந்து சில நாட்களுக்குள் குணமடைந்துவிடலாம் என்றும் அவர் கூறினார்.

இந்த நிலைமை குறித்த விசாரணைகள் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அசுத்தமான குடிநீர் ஆதாரங்கள் நோய் பரவுவதற்கு காரணமாக அமையலாம் என்பதால் சுகாதார மற்றும் கல்வி அமைச்சுகளினால் விசேட வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பிள்ளைகளின் உணவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும், எப்போதும் சுத்தமான மற்றும் கொதிக்க வைத்து ஆறவைத்த நீரையே பயன்படுத்துமாறும் சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading