இலங்கையில் SLS இல்லாத தலைக்கவசங்களுக்கு எதிராக சட்டம்
தரமற்ற தலைக்கவசங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த அதிகாரசபை, SLS முத்திரை இல்லாத தலைக்கவசங்களை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், விநியோகித்தல், களஞ்சியப்படுத்துதல், காட்சிப்படுத்துதல் அல்லது விற்பனை செய்தல் சட்டவிரோதமானது எனத் தெரிவித்துள்ளது.
2015.07.16 ஆம் திகதியுடைய 1923/65 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையின் 59 ஆம் இலக்கக் கட்டளைக்கு அமைய, இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள் பாதுகாப்புத் தலைக்கவசங்களுக்கு SLS 517 தரநிலைக்குரிய SLS தரச்சான்றிழ் முத்திரை இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த 27ஆம் திகதி தீவு முழுவதும் 98 சிறப்புச் சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், இதன்போது SLS முத்திரை இல்லாத 431 க்கும் மேற்பட்ட தலைக்கவசங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
மேலும், SLS அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிக்காத காலப்பகுதியில் தலைக்கவசங்களை உற்பத்தி செய்த இரு தொழிற்சாலைகளின் 3,520 தலைக்கவசங்களின் விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டில் இதுவரை 151 சோதனைகளும் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், 4,038 க்கும் மேற்பட்ட தலைக்கவசங்கள் தொடர்பில் கைப்பற்றுதல், விற்பனையை நிறுத்துதல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

You must be logged in to post a comment.