Local

இலங்கை அபாயகரமான நிலையில் எச்சரிக்கும் வைத்தியர் சங்கம்!

நாட்டில் தற்போது மிகவும் அபாயகரமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அந்த சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே “தற்போது ஏற்பட்டுள்ள அலை அல்லது கொத்தணி மிகவும் கடுமையானது. நாளாந்தம் நூறு, இருநூறு என நோயார்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றார்கள்.

இந்நிலையில், வைத்தியசாலைக் கட்டமைப்பில் பாரிய நெரிசல் ஏற்படுகின்றது. எனினும் அதிர்ஷ்டவசமாக இன்னும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கு உட்படுத்துவதற்கான தேவை ஏற்படவில்லை.

கொரோனா தொற்றாளருக்கு 24 மணித்தியாலத்திற்குள் இரண்டு பி.சி.ஆர் பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இரண்டு பரிசோதனைகளிலும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டால் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.

அத்துடன் வேறு நாட்களைவிட தற்போதைய சூழ்நிலையில் மிகவும் ஆபத்தான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. சமூகத்துக்கு மத்தியில் தொற்று பரவியுள்ளது என இப்போதைக்கு எமக்குக் கூற முடியாது. ஆனால் வேறு நாட்களைவிட தற்போது மிகவும் ஒரு ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது.

அத்துடன், தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவிடம் சில தரவுகள் இருக்கின்றன. இராணுவத்திடமும் தரவுகள் இருக்கின்றன. அத்துடன் இன்னும் சில தரப்பினரிடமும் தரவுகள் காணப்படுகின்றன.

குறிப்பாக பி.சி.ஆர் பரிசோதனை தொடர்பான எண்ணிக்கை தொற்று நோய் பிரிவு ஊடாக அன்றி சுகாதார அமைச்சின் ஆரம்ப பராமரிப்புச் சேவையின் பணிப்பாளருக்கே செல்கின்றது. இவையனைத்தும் ஒரு இடத்திற்கு வர வேண்டும்.

தொற்று நோய்ப் பிரிவு தம்மிடம் உள்ள தரவுகளை மாத்திரம் வைத்துத் தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது. இதனால்தான் நாம் இதற்கான செயற்பாட்டுப் பிரிவொன்றை யோசனையாக முன்வைக்கின்றோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading