ஈரானின் உச்ச தலைவரை சந்திக்க விரும்பும் டிரம்ப்..!!
ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள கருத்துக்கள் முற்றிலும் யதார்த்தத்திற்குப் புறம்பானவை என்று மத்திய கிழக்கு மூலோபாய ஆய்வுகளுக்கான மையத்தின் மூத்த ஆராய்ச்சி ஆய்வாளர் அபாஸ் அஸ்லானி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நியூயார்க் போஸ்ட் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அதிபர் ட்ரம்ப், “நான் ஈரானிய உச்ச தலைவரைச் சந்திக்க விரும்புகிறேன். சூழ்நிலைகள் எப்படி அமைகிறது என்பதைப் பொறுத்து, நாங்கள் ஒரு கட்டத்தில் சந்திப்போம்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், ஈரான் அணு ஆயுதக் கொள்கையைக் கைவிட ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நிலைமையை மிகைப்படுத்தும் அமெரிக்கா:
இதுகுறித்து அல் ஜசீரா ஊடகத்திற்குப் பேட்டியளித்த அரசியல் ஆய்வாளர் அபாஸ் அஸ்லானி, உலகளாவிய எரிசக்தி மற்றும் கச்சா எண்ணெய் சந்தைகளில் ஒரு சாதகமான சூழலை உருவாக்குவதற்காகவே அதிபர் ட்ரம்ப் இந்த நிலைமையை மிகைப்படுத்திப் பேசி வருகிறார் என்று குற்றம் சாட்டினார்.
மேலும் அவர் பேசுகையில், “அமெரிக்கா ஒரு நாள் சாதகமான கருத்துக்களைத் தெரிவிக்கிறது; மறுநாளே அச்சுறுத்தல் விடுக்கிறது. இந்தத் தொடர்ச்சியான கொள்கை மாற்றங்கள் மற்றும் ஏற்ற இறக்கங்கள், அணு ஆயுதப் பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரப் பாதையில் அமெரிக்கா தீவிரமாக இல்லை என்பதையே ஈரானுக்கு உணர்த்துகின்றன” என்று இராஜதந்திரச் சிக்கலை சுட்டிக்காட்டினார். பிராந்தியத்தில் பதற்றம் நீடித்து வரும் வேளையில், ட்ரம்பின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

You must be logged in to post a comment.