Local

கரும்புகையை வெளியேற்றும் வாகனங்களுக்கு எதிராக கடுமையாகும் சட்டம்

வீதிகளில் அதிகப்படியான கரும்புகையை வெளியேற்றிச் செல்லும் வாகனங்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் போக்குவரத்துப் கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்தார்.

இவ்வாறான வாகனங்கள் தொடர்பில் ஏற்கனவே பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

உலகளவில் காற்று மாசுபாடு ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதை சுட்டிக்காட்டிய பிரதி பொலிஸ் மா அதிபர், இதன் காரணமாக வருடத்திற்கு சுமார் ஒரு மில்லியன் மக்கள் உயிரிழப்பதாகவும் வலியுறுத்தினார்.

இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக, மோட்டார் வாகன பரிசோதகர்களுடன் இணைந்து அதிகப்படியான கரும்புகையை வெளியேற்றும் வாகனங்களை அடையாளம் கண்டு, அவற்றை பரிசோதித்து பொலிஸ் பொறுப்பில் எடுத்து சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், வீதியில் இவ்வாறான வாகனங்கள் பயணிப்பதைக் கண்டால் அது குறித்து அறிவிக்க பொதுமக்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதற்காக 070 3500525 என்ற WhatsApp இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட வாகனத்தின் இலக்கம் அல்லது வீடியோ காட்சியை அனுப்பி முறைப்பாடு செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டார்.

அந்த தகவல்களின் அடிப்படையில், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களப் பரிசோதகர்கள் ஊடாக குறித்த வாகனங்கள் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading