Sports

குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசனை வீழ்த்திய இளம் வீரர்!

குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் சுமார் 19 ஆண்டுகளுக்கு பின் ஜேக் பால் என்ற 27 வயது குத்துச்சண்டை வீரருக்கு எதிராக தொழில்முறை போட்டியில் பங்கேற்றார். இந்தப் போட்டியில் எட்டு சுற்றுகளின் முடிவில் ஜேக் பால் புள்ளிகள் அடிப்படையில் மைக் டைசைனை வீழ்த்தினார்.

58 வயதான மைக் டைசன், 27 வயது இளம் வீரருடன் போட்டி போடுவது தவறு என பலரும் போட்டிக்கு முன்பே கூறி வந்த நிலையில், போட்டியை பார்த்த ரசிகர்கள் வெறுத்துப் போனார்கள். மைக் டைசன் வயது மூப்பின் காரணமாக கால்களை வேகமாக நகர்த்த முடியாமல் திணறினார்.

இந்தப் போட்டியில் ஜேக் பால் 278 முறை மைக் டைசனை தாக்க முயன்றார். அதில் 78 தாக்குதல்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. மறுபுறம் மைக் டைசன் 97 முறை மட்டுமே ஜேக் பாலை தாக்க முயன்றார். அதில் 12 தாக்குதல்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் இருந்தே இந்தப் போட்டி எந்த அளவில் இருந்தது என்பதை புரிந்து கொள்ளலாம்.

இரண்டு நடுவர்களில் ஒருவர் 80 – 72 எனவும், மற்றொருவர் 79 – 73 எனவும் ஜேக் பாலுக்கு சாதகமாக புள்ளிகளை வழங்கினார்கள்.

இந்தப் போட்டியில் மூன்றாவது சுற்றுக்கு பின் மைக் டைசன் ஒவ்வொரு சுற்றிலும் தன்னை தற்காத்துக் கொள்வதில் தான் அதிக நேரத்தை செலவிட்டார். ஐந்தாவது சுற்றின் போது ஜேக் பால் அதிக வித்தியாசத்தில் புள்ளிகளை பெற்று விட்டதால் அதன் பின் நாக் அவுட் செய்வது மட்டுமே மைக் டைசனுக்கு ஒரே வெற்றி வாய்ப்பாக இருந்தது.

ஆனால், ஜேக் பாலின் தாக்குதல்களில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்வதே அவருக்கு கடினமான விஷயமாக இருந்தது. இந்தப் போட்டியில் மைக் டைசன் இளம் வீரரைப் போல ஆடி வெல்வார் என கனவு கண்டு கொண்டு இருந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

சமூக வலைதளங்களில் இந்தப் போட்டிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது முதியவருக்கு எதிரான வன்முறை என சிலர் விமர்சித்து வருகின்றனர். மைக் டைசனுக்கு 170 கோடி ரூபாய் கிடைக்கும் என்பதால் தான் அவர் இந்தப் போட்டிக்கு ஒப்புக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading