குருநாகல் மக்களே, இதோ உங்களுக்காக Uber பயணம் தயாராக உள்ளது
யானைப் பாறை நகரமான குருநாகலுக்கு Uber தனது சேவையை விரிவுபடுத்துகிறது, இவ்வருடத்தில் இலங்கையில் Uber சேவையைத் தொடங்கும் மூன்றாவது புதிய மாவட்டம் இதுவாகும்
இலங்கையின் மிகவும் பிரபலமான போக்குவரத்துச் செயலியான Uber, இன்று குருநாகலில் தனது சேவைகளைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைத் தொடர்ந்து, 2026ஆம் ஆண்டில் Uber தனது சேவையை விரிவுபடுத்தும் மூன்றாவது மாவட்டம் இதுவாகும். இனி, குருநாகல் நகரவாசிகள் மற்றும் அங்கு வருகை தருபவர்கள் Uber செயலியைப் பயன்படுத்தி கார்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயணங்களை முன்பதிவு செய்யலாம்; இது நகருக்குள் மேற்கொள்ளப்படும் அன்றாடப் பயணங்களுக்கு அதிக வசதியையும் பல்வேறு தெரிவுகளையும் வழங்குகிறது.
இலங்கையின் முக்கிய வணிக மையங்களில் ஒன்றாகவும், நாட்டின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் முக்கிய நுழைவாயிலாகவும் திகழும் குருநாகலில், வேலை, கல்வி, கொள்வனவு மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக மக்கள் பெருமளவில் பயணிக்கின்றனர். Uber-இன் இந்தச் சேவை அறிமுகம், பயணத்திற்கு முன்பே கட்டணத்தை அறியும் வசதி மற்றும் செயலி மூலம் உங்கள் இருப்பிடத்திற்கே வாகனத்தை வரவழைக்கும் வசதி ஆகியவற்றை வழங்குவதன் மூலம், இத்தகைய அன்றாடப் பயணங்களை எளிதாக்கும்.
இந்த விரிவாக்கமானது கார்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை இயக்கும் உள்ளூர் ஓட்டுநர்களுக்கு நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய வருமான வாய்ப்புகளை உருவாக்கும்; இது அவர்களை அதிக பயணிகளுடன் இணைப்பதோடு, எப்போது, எங்கே வாகனம் ஓட்ட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சுதந்திரத்தையும் அவர்களுக்கு வழங்குகிறது.
இது குறித்து Uber Sri Lanka நிறுவனத்தின் போக்குவரத்துத் தீர்வுகளுக்கான முகாமையாளர் கௌஷல்யா குணரத்ன கூறுகையில்: “நம்பகமான, செயலி சார்ந்த போக்குவரத்துச் சேவைகளுக்கான தேவை இலங்கையின் முக்கிய நகரங்களுக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. Uber சேவையை நாட்டின் உட்பகுதிகளுக்கும் விரிவுபடுத்துவதற்கான பெரும் வாய்ப்பை நாங்கள் காண்கிறோம்; அந்தப் பயணத்தில் குருநாகல் ஒரு முக்கிய பகுதியாக அமைகிறது. நாங்கள் சேவையை விரிவுபடுத்தும்போது, எங்கள் நோக்கம் எளிமையானது: அதிக பயணிகளுக்கு Uber சேவையின் வசதியை வழங்குவதும், நாங்கள் சேவையைத் தொடங்கும் சமூகங்களில் உள்ள ஓட்டுநர்களுக்கு அர்த்தமுள்ள வருமான வாய்ப்புகளை உருவாக்குவதும் ஆகும்.”
Uber வாயிலாக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பயணமும், ஜிபிஎஸ் (GPS) தொழில்நுட்பத்தின் உதவியுடனான நிகழ்நேர கண்காணிப்பு, பயணங்களைப் பகிர்தல், ஓட்டுநர் சரிபார்ப்பு, 24X7 பாதுகாப்பு உதவி மையம் மற்றும் செயலிக்குள்ளேயே அவசரகால பொத்தான் போன்ற உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்களால் பாதுகாக்கப்படுகிறது. இவை பயணிகள் மற்றும் ஓட்டுநர்களுக்கு மிகுந்த மன நிம்மதியை அளிக்க உதவுகின்றன.
நாட்டின் மேலும் பல பகுதிகளுக்குச் செயலி-சார்ந்த போக்குவரத்துச் சேவைகளை விரிவுபடுத்தி வரும் நிலையில், குருநாகலில் மேற்கொள்ளப்பட்ட இந்த அறிமுகமானது இலங்கையில் Uber-இன் வளர்ந்து வரும் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்துகிறது.

You must be logged in to post a comment.