கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு இரவு நேர ஊரடங்கு!

மேற்காசிய நாடான லெபனான் நாட்டில், கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதனையடுத்து அந்தநாடு வரும் 17 ஆம் திகதி முதல் ஜனவரி 9 ஆம் திகதி வரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளது. அதாவது 17 ஆம் திகதி முதல் ஜனவரி ஒன்பதாம் திகதி வரை, ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு இரவு 7 மணியிலிருந்து காலை 6 மணிவரை வீடுகளில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் அந்த நேரத்தில் வெளிவர முயன்றால், 48 மணிநேரங்களுக்குள் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை சான்று வைத்திருக்க வேண்டும் எனவும் அந்தநாடு அறிவித்துள்ளது. மேலும் பாதுகாப்பு, இராணுவம், சுகாதாரம், கல்வி மற்றும் சுற்றுலா துறைகளில் பணியாற்றுபவர்கள் ஜனவரி 10 ஆம் திகதிக்குள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என அந்தநாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒருவேளை அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லையென்றால், வாரம் இரண்டு முறை சொந்த செலவில் கொரோனா பரிசோதனை செய்துகொண்டு அதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அந்தநாட்டு அரசு அறிவித்துள்ளது.
