சட்டவிரோத மதுவை தடுக்க குறைந்த விலையில் புதிய மதுபானம்
சட்டவிரோத மதுபான பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் குறைந்த விலையில் புதிய வகை மதுபானத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசாங்க நிதி பற்றிய குழுவின் சமீபத்திய கூட்டத்தில், மதுவரி ஆணையாளர் நாயகம் ஜெனரல் உதய குமார, மதுபானத்தின் விலை அதிகரிப்பு காரணமாக, பலர் சட்டவிரோத மதுபானங்களை அருந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதனால் அரசாங்கத்திற்கு வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலையைத் தடுக்க குறைந்த விலையில் மதுபான போத்தலை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மதுவரி ஆணையர் நாயகம் ஜெனரல் உதய குமார தெரிவித்தார்.
இதன்போது கருத்த தெரிவித்த மதுவரி திணைக்களத்தின் அதிகாரி ஜயந்த பண்டார, 2022 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் செறிவு கூடிய மதுபானங்களின் நுகர்வு குறைந்து வருவதாகக் கூறினார்.
சட்டவிரோத மதுபானங்களில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்களால் ஏற்படும் பாதிப்புக்களை குறைக்க இந்த புதிய மதுபான போத்தல் அறிமுகப்படுத்தப்படும் என்று ஜயந்த பண்டார தெரிவித்தார்.
இதன் முதல் கட்டமாக 180 மில்லி லீட்டர் மதுபான போத்தலை அறிமுகப்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 50 முதல் 100 பில்லியன் ரூபாய் வரை வரி வருவாயை ஈட்ட முடியும் என்றும் மதுவரி திணைக்களத்தின் அதிகாரி ஜயந்த பண்டார சுட்டிக்காட்டினார்.

You must be logged in to post a comment.