World

சிறுமிகள் வழக்கில் டிரம்ப் தொடர்பு? – எலான் மஸ்க் கிளப்பிய பெரும் சர்ச்சை

அமெரிக்க ஜனதிபதி டொனால்டு டிரம்பின் முன்னாள் நண்பரும், இந்நாள் எதிரியுமான எலான் மஸ்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் பாலியல் குற்ற வழக்கத்தை மீண்டும் கிளறியுள்ளார்.

பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனின் சீல் வைக்கப்பட்ட ஆவணங்களில் டிரம்பின் பெயர் இருப்பதாக மஸ்க் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

“அதிகாரப்பூர்வ ஜெஃப்ரி எப்ஸ்டீன் சிறுமிகள் பாலியல் குற்றவாளி (Pedophile) கைது எண்ணிக்கை: 0 0 0 0” என்று எக்ஸ் பதிவில் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, “எப்ஸ்டீன் ஆவணங்களில் டிரம்ப் இருக்கிறார். அதனால்தான் அவை பொதுவில் வெளியிடப்படவில்லை” என்று மஸ்க் ஜூன் மாதம் பதிவிட்டிருந்தார். பின்னர், அந்தப் பதிவை நீக்கி, “நான் எல்லை மீறிவிட்டேன்” என்று கூறியிருந்தார்.

எப்ஸ்டீன் மற்றும் டிரம்ப் 1990-களில் நண்பர்களாகவும் அண்டை வீட்டாராகவும் இருந்ததாலும், ஒரே விருந்துகளில் கலந்துகொண்டதாலும், டிரம்பின் பெயர் எப்ஸ்டீன் ஆவணங்களில் உள்ளதா என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்துள்ளன.

யார் இந்த எப்ஸ்டீன்?

ஜெஃப்ரி எப்ஸ்டீன், அமெரிக்காவின் மிகவும் செல்வாக்கு மிக்க ஒரு நிதியாளர். பெரும் நிறுவனங்களுக்கு நிதி திரட்டித் தரும் பணியில் ஈடுபட்டு, பல பணக்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். ஆனால், அவரது ஆடம்பர வாழ்க்கை முறைக்கும், சமூக அந்தஸ்துக்கும் பின்னால், கிரிமினல் உலகமே இருந்தது.

2000-களின் முற்பகுதியிலிருந்து, எப்ஸ்டீன் மீது இளம் சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது, கடத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அவருக்குச் சொந்தமான ‘லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்’ என்ற கரீபியன் தீவில், பல முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் ஆகியோரை அழைத்து வந்து, அங்கு பாலியல் ரீதியான வன்முறைகளில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவாகின.

2008-ல் எப்ஸ்டீனுக்கு மிகக் குறுகிய காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், 2019-ல் மேலும் கடுமையான பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகளுடன் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.

ஆனால், வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே, அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூயார்க் சிறையில் மர்மமான முறையில் இறந்துபோனார். அவரது மரணம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது, அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா என்பது இன்று வரை ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது.

‘எப்ஸ்டீன் கோப்புகள்’

ஜெஃப்ரி எப்ஸ்டீனின் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள், அவருடைய தொலைபேசி அழைப்பு பதிவுகள், விமானப் பயணப் பதிவுகள், நீதிமன்ற ஆவணங்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள், அவருடன் தொடர்பு கொண்ட பிரபலங்களின் பட்டியல் ஆகியவை ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ என அழைக்கப்படுகின்றன.

இந்த கோப்புகளில் பல உயர்மட்ட அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பிரபல கலைஞர்கள் மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக நீண்டகாலமாகவே சந்தேகங்கள் நிலவி வருகின்றன. இந்த கோப்புகள் வெளியானால், பலரின் இமேஜ் அடியோடு சரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading