Local

விஜயகலா கைது: சிவாஜி கண்டனம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் கைதுசெய்யப்பட்டமைக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம் தொடர்பில் பேசியமை தொடர்பில் குற்றத் தடுப்புப் பிரிவுக்கு நேற்று விஜயகலா மகேஸ்வரன் அழைக்கப்பட்டிருந்தார். இதன்போது அவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இது குறித்துக் கருத்து வெளியிட்ட சிவாஜிலிங்கம்,

“யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விஜயகலா பேசிய பேச்சு தொடர்பில் விசாரணைகள் நடந்திருக்கின்றன. அதற்கமைய அவரைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், ஆகக் குறைந்தது இரண்டு வாரமாவது தடுத்து வைக்க முயற்சி நடைபெறுவதாகவும் அண்மையில் கொழும்புக்குப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தபோது அவரிடம் தெரிவித்திருந்தேன்.

ஆகவே, சிரேஷ்ட சட்டத்தரணிகள் ஊடாக பிணை மனுவைக் கோர வேண்டும். இல்லாவிட்டால் முன் பிணை கோருங்கள் என்று நான் கூறியிருந்தேன்.

ஆனாலும், அவருக்கு யார் என்ன ஆலோசனையைக் கூறினார்களோ தெரியவில்லை. அவர் அவ்வாறு செய்யவில்லை. எதுவானாலும் அவர் கைதுசெய்யப்பட்டதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இதுவொரு அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை. அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ்தான் அவர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார். இதுவொரு நீதிக்கு விரோதமான அரசின் எதேச்சதிகாரமான போக்கு” என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading