ட்ரம்பால் 2 பில்லியன் டொலர் மற்றும் 14,000 வேலை வாய்ப்பு இழப்பு
கனடிய மக்கள் அமெரிக்க கார்கள், போர்பன் மற்றும் மாமிசத்தைப் புறக்கணித்துள்ள நிலையில், தற்போது அமெரிக்காவில் விடுமுறையை கழிக்க செல்வதையும் கைவிட்டுள்ளனர்.
கனடாவை அமெரிக்க மாகாணம் என தொடர்ந்து அச்சுறுத்தி வரும் ட்ரம்புக்கு கனேடிய மக்கள் பதிலடி அளித்துள்ளனர். கனேடிய மக்களின் இந்தப் புறக்கணிப்பால் அமெரிக்க சுற்றுலாத் துறைக்கு பேரிடி என்றே கூறப்படுகிறது.

அமெரிக்காவிற்கு பயணப்படும் சர்வதேச பயணிகளில் கனடியர்களே நீண்ட காலமாக முன்னணியில் உள்ளனர். அவர்களின் பயணச் செலவில் 10 சதவீதம் சரிவடைந்தால் கூட அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு 2 பில்லியன் டொலர் இழப்பை அது ஏற்படுத்தும்.
இதனால் 14,000 வேலை இழப்புகள் ஏற்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கனேடிய மக்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளது தற்போது வெளிப்படையாக தெரியத் தொடங்கியுள்ளது. அதாவது பிப்ரவரியில் அமெரிக்காவிற்கான கனேடிய விமானப் பயணம் 13 சதவீதம் குறைந்துள்ளது.
காரில் பயணம் செய்வதும் சீரான சரிவைக் கண்டுள்ளது, கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது காரில் எல்லையைக் கடக்கும் கனேடியர்களின் எண்ணிக்கை 23 சதவீதம் குறைந்துள்ளது.
இது ஜனாதிபதி ட்ரம்பின் 51வது மாகாணம் என்ற அச்சுறுத்தலுக்கு பின்னரே நடந்துள்ளது. இதனிடையே தேவை குறைந்துள்ளதால், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு அமெரிக்கா செல்லும் விமானங்களுக்கான எண்ணிக்கையை விமான நிறுவனங்கள் சராசரியாக 6.1 சதவீதம் குறைக்க வழிவகுத்துள்ளது.

கடந்த மாதம் லாஸ் வேகாஸுக்கு பயணப்பட்ட கனேடியர்களின் எண்ணிக்கை 9.4 சதவீதம் குறைந்துள்ளது, அதே காலகட்டத்தில் நியூயார்க் பயணப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 சதவீதம் குறைந்துள்ளது.
வரி அச்சுறுத்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து பஃபலோ நயாகராவிற்கான கனேடிய போக்குவரத்தும் 52 சதவீதம் குறைந்துள்ளது. ஃபிளேர் ஏர்லைன்ஸ் அடுத்த மாதம் வான்கூவர் மற்றும் கால்கரியில் இருந்து அரிசோனாவின் பீனிக்ஸ் வரையிலான அதன் வழித்தடங்களைக் கூட கைவிடுகிறது.

இந்த நிலையில் ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு கனேடிய மக்கள் ஒருபோதும் பணியப்போவதில்லை என கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி சூளுரைத்துள்ளார்.

You must be logged in to post a comment.