”நான் ஏமாறவில்லை” – ஹிஸ்புல்லா விளக்கம்
பாராளுமன்ற உறுப்பினர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா, கானாவில் தங்க மோசடி முயற்சி தொடர்பாக முறைப்பாடு ஒன்றை அளித்தது உண்மை என ஒப்புக்கொண்டாலும், தான் ஏமாறவோ, மோசடி செய்யப்படவோ இல்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.
கானாவின் முக்கிய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளில், “இலங்கை எம்.பி ஒருவர் 20 இலட்சம் அமெரிக்க டொலர் மதிப்பிலான தங்க மோசடியில் சிக்கினார்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஹிஸ்புல்லாவின் ஊடக பிரிவு வெளியிட்ட அறிக்கையில், அந்த குற்றச்சாட்டுகள் “முழுமையாக பொய்யானதும் அரசியல் நோக்கமுடையதும்” என மறுக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில் கூறப்பட்டதாவது, ஹிஸ்புல்லா அவர்கள் சவூதி தொழிலதிபர்களுடன் சட்டபூர்வமான வணிக நோக்கில் கானாவிற்கு சென்றபோது, சிலர் மோசடி முயற்சியில் ஈடுபட்டதை அறிந்து, உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளிடம் அறிவித்தார். பின்னர் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
“ஹிஸ்புல்லாவுக்கு இச்சம்பவத்துடன் எந்தவித தொடர்பும் இல்லை. பொய்யான தகவல்கள் அரசியல் நோக்கில் பரப்பப்படுகின்றன,” என அவ் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment.