நாமல் ராஜபக்ஷவிற்கு செப். 23 வரை விளக்கமறியல்
எயார்பஸ் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவிற்கு எதிர்வரும் செப்டெம்பர் 23 வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை சந்தேகநபராக நாமல் ராஜபக்ஷ பெயரிடப்பட்ட நிலையில், அவர் இன்றையதினம் (16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பில் இடம்பெறும் மற்றுமொரு விசாரணை தொடர்பில் கடந்த செப்டெம்பர் 04ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் ராஜபக்ஷ அன்றையதினம் கைது செய்யப்பட்டதோடு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டார்.
இந்நிலையில் எயார் பஸ் கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்ற 2 மில்லியன் டொலர் நிதி முறைகேடு குறித்து நாமல் ராஜபக்ஷவிற்கு எதிர்வரும் செப்டெம்பர் 23ஆம் திகதி வரை 7 நாட்களுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றினால் விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
எயார் பஸ் வழக்கின் சந்தேகநபரான நாமல் நீதிமன்றிற்கு அழைத்து வருகை!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்றுமுன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட அவரை செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கடந்த செப்டெம்பர் 04ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எயார்பஸ் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலஞ்ச ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய குறித்த வழக்கில் அவரை சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பில், அவரிடம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு செய்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment.