நாளை மஹிந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை (12) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமேஜ் தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாளை காலை 9.00 மணிக்கு அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், சில சட்ட ரீதியான விடயங்கள் குறித்து கலந்துரையாட வேண்டியுள்ளதால், இன்று மாலை சட்டத்தரணிகள் குழுவொன்றுடன் இது குறித்து ஆலோசிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, மறைந்த கபில சந்திரசேன வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், அந்த வாக்குமூலமானது அச்சுறுத்தி, வலுக்கட்டாயமாகப் பெறப்பட்டது என கபில சந்திரசேன நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி தாக்கல் செய்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய சட்டத்தரணி மனோஜ் கமேஜ், அத்தகைய சூழலில் இந்த அழைப்பு விடுக்கப்படுவது பாரதூரமான விடயம் எனவும் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான சட்டவிரோத வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த அழைப்பு விடுக்கப்படுமானால், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிச்சயமாக ஆணைக்குழுவிற்கு வருவார் என்றே நாம் தீர்மானித்துள்ளோம். ஏனெனில் அவர் ஒருபோதும் பிரச்சினைகளில் இருந்து தப்பியோடுபவர் அல்ல. எனினும், சில சட்ட ரீதியான காரணிகளை நாம் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment.