பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் அடுத்த அதிரடி முடிவு!!!
பாகிஸ்தானுக்குச் சொந்தமான மற்றும் அங்கிருந்து இயக்கப்படும் அனைத்து விமானங்களுக்கும் தனது வான்வெளியை மூடுவதன் மூலம் இந்தியா பரஸ்பர நடவடிக்கை ஒன்றை அறிவித்துள்ளது.
இந்திய விமான நிறுவனங்களுக்குச் சொந்தமான மற்றும் இயக்கப்படும் அனைத்து விமானங்களுக்கும் பாகிஸ்தான் தனது வான்வெளியை மூட முடிவு செய்த ஆறு நாட்களுக்குப் பிறகு இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது.

இரு நாடுகளும் எடுத்துள்ள இந்த நடவடிக்கையானது மே மாதம் 23ம் திகதி வரையில் அமுலில் இருக்கும் என்றே கூறப்படுகிறது. அதன் பின்னர் மறு உத்தரவு வெளியாகும் என்றே நம்பப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளால் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத ரீதியாக தூண்டப்பட்ட இந்த பயங்கரவாதத் தாக்குதலானது பாகிஸ்தானின் இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் வன்முறையை தூண்டும் உரையை நிகழ்த்திய சில நாட்களுக்குப் பிறகு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையேயான பதட்டமான உறவுகள் மேலும் மோசமடைந்து வருவதாலும், இந்தியாவின் இராணுவ நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அஞ்சும் நேரத்திலும், பாகிஸ்தானில் இருந்து வரும் விமானங்கள் எப்படியும் இந்திய வான்வெளியைத் தவிர்த்து வந்தன.

ஆனால் இந்தியாவின் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், பாகிஸ்தானின் விமானங்கள் அவர்கள் விரும்பினாலும் அனுமதிக்கப்படாது என்றே கூறப்படுகிறது.
தென்கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியாவில் உள்ள இடங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ள பாகிஸ்தானில் இருந்து புறப்படும் விமானங்கள் தற்போது இந்தியாவைச் சுற்றி வர வேண்டும். இது ஏற்கனவே நிதிப் பற்றாக்குறையில் உள்ள பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும், அதே நேரத்தில் பயண நேரத்தையும் கணிசமாக அதிகரிக்கச் செய்யும்.
ஆனால் பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் மட்டுமே இந்திய வான்வெளியைப் பயன்படுத்தி கோலாலம்பூருக்கு விமானப் போக்குவரத்து சேவைகளை இயக்குவதால், இந்தத் தடையின் தாக்கம் இந்தியாவை விட பாகிஸ்தானின் விமானத் துறையில் குறைவாகவே இருக்கும்.

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக இந்தியா உறுதியளித்துள்ள நிலையில், உடனடி இராணுவத் தாக்குதலைப் பற்றி பாகிஸ்தான் கவலை கொண்டுள்ளது என்றே தகவல் வெளியாகியுள்ளது.

You must be logged in to post a comment.