Local

மூவர் உயிரிழப்பு திட்டமிட்ட படுகொலை?

கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாப்புகட வத்த பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த தீ விபத்து இன்று (24) அதிகாலை 6.40 மணியளவில் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில், தந்தை, மகள் மற்றும் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததுடன், தாய் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவத்தில் 4 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் இருந்த தந்தை, மகள் மற்றும் குறித்த வீட்டுக்கு வந்திருந்த மகளின் காதலன் என தெரிவிக்கப்படும் இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த 60 வயதான தாய் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த தந்தையான ஈஸ்வரதேவன், கட்டுகஸ்தோட்டை ரணவன வீதியில் வெற்றிலை விற்பனை செய்து வரும் நபராவார். இவரது 31 வயதுடைய மகள் ஈஸ்வரதேவன் மேனகா மற்றும் அவரது காதலன் என தெரிவிக்கப்படும் நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தகட்டு கூரையால் வேயப்பட்ட ஒரு சிறிய வீட்டில் இவர்கள் வசித்து வந்துள்ளனர். தீ ஏற்பட்டதை அவதானித்த பிரதேசவாசிகள் குறித்த வீட்டின் கதவொன்றைத் திறந்து அங்கிருந்த ராணி அம்மா என அழைக்கப்படும் பெண்ணை (தாய்) மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

தீக்காயங்களுடன் உயிரிழந்த யுவதியின் காதலன் வீட்டுக்கு வந்து தீ வைத்ததாக தெரிவிக்கப்படும் தகவலின் அடிப்படையில் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலைய குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அந்தவகையில் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் குறித்த சம்பவத்தில் உயிரிழந்த யுவதிக்கும் மேற்படி குறித்த இளைஞருக்கும் இடையிலான காதல் தொடர்பே இந்த தீபரவலக்கான காரணம் என்றும், இன்று அதிகாலை (24) குறித்த வீட்டுக்கு வருகைத் தந்த இளைஞன், வீட்டுக்குள் எவருக்கும் செல்ல முடியாத வகையில் கதவுகளை பூட்டி, தீயை வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த இளைஞன் ஏதோ ஒருவகையான திரவத்தை வீட்டுக்குள் வீசியுள்ளதாக வைத்தியசாலையில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள யுவதியின் தாய் வாக்குமூலமளித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading