மெட்ரோ தாழ்தள பேருந்துகளில் பயணிப்போருக்கு சிறப்பு சலுகைகள்
நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இறக்குமதி செய்யப்பட்ட தாழ்தள மெட்ரோ (Metro) பேருந்துகளில் வார இறுதியில் பயணிக்கும் பயணிகளுக்காக ரூ.799 பெறுமதியிலான சிறப்புச் சலுகைப் பொதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்டுள்ள 104 மெட்ரோ பேருந்துகளின் பதிவு நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையிலே,இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்ததாவது, இந்தப் பேருந்துகள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. பதிவு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், இம்மாத இறுதிக்குள் அனைத்து 104 பேருந்துகளும் சேவையில் இணைக்கப்படும். இதற்கிடையில், மெட்ரோ நிறுவனம் வார இறுதியில் பயணிக்கும் பயணிகளுக்காக ரூ.799 பெறுமதியிலான சிறப்புச் சலுகைப் பொதியை அறிமுகப்படுத்தியுள்ளது. சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தப் பாதையிலும் எத்தனை தடவைகள் பயணம் செய்தாலும், ரூ.799 செலுத்துவதன் மூலம் இந்தச் சலுகையைப் பெற முடியும். இந்தச் சலுகையின் கீழ் கட்டணம் செலுத்தும் பெரியவருடன் பயணம் செய்யும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் அறவிடப்பட மாட்டாது.

You must be logged in to post a comment.