லாரக் தீவில் ஈரான் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
ஈரானின் லாரக் தீவில் அமைந்திருந்த 2 ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜூலை இறுதிக்குப் பின்னர் ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்டதாக அறியப்படும் முதல் தாக்குதல் இதுவாகும்.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஹோர்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடிகளுடன் ரொக்கெட்டுகளை ஏவுவதற்கு தயாராகி வந்ததாகக் கண்டறியப்பட்டதையடுத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தளபதி டிம் ஹாக்கின்ஸ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நேற்று (31) நடத்தப்பட்ட அமெரிக்கத் தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்ததாக IRGC தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு “பதில் மற்றும் தண்டனை” வழங்கப்படும் எனவும் IRGC எச்சரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் அமெரிக்க மத்திய கட்டளையிடம் மேலதிக விளக்கத்தை பெற முயற்சிக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment.