Local

ஹக்கீமின் உருவபொம்மையை எரித்து போராட்டம் !

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சாய்ந்தமருதுக்கு வரக்கூடாது எனவும், தலைவர் அஷ்ரபின் நினைவு தினத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது எனவும் சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசலுக்கு முன்னால் ஜும்மா தொழுகையை தொடர்ந்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாளை (16) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரபின் 23 வது நினைவு நாள் சாய்ந்தமருதில் தேசிய நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் சாய்ந்தமருதுக்கு வரக்கூடாது என்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இலங்கை பொதுசேவை ஆணைக்குழு முன்னாள் உறுப்பினரும், தேசிய காங்கிரஸின் கடந்த பொதுத்தேர்தல் வேட்பாளருமான ஏ.எல்.எம். சலீம், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்கள், கடந்த உள்ளுராட்சி மன்ற பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த வேட்பாளர்கள், பல்வேறு கட்சிகளின் முக்கியஸ்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதானிகள் உட்பட பொதுமக்களின் ஒரு பகுதியினர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள் பலருக்கும் எதிராக போராட்டகாரர்கள் கோசம் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஆகியோர்களின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. சாய்ந்தமருது பொலிஸார் வீதி போக்குவரத்தை சீர்செய்துடன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். கோஷமெழுப்பிய போராட்டகாரர்கள் சிறிது நேரத்தின் பின்னர் அமைதியாக கலைந்து சென்றனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading