11 பில்லியன் டொலர்களை தாண்டிய ஏற்றுமதி வருவாய்!
2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை நேர்மறையான செயல்திறனையும் நிலையான முன்னேற்றத்தையும் காட்டியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
மொத்த ஏற்றுமதி வருவாய் 11554.32 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும், இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 6.61% வளர்ச்சி என்றும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் பொருட்கள் மற்றும் சேவைத் துறைகளில் மொத்த ஏற்றுமதி வருவாய் 1,607.58 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
இதனை 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது 2.57% வளர்ச்சியாகும்.
இலங்கையின் ஏற்றுமதித் துறையின் வலிமையையும், சந்தை அணுகலை விரிவுபடுத்துவதற்கும் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட மூலோபாய முயற்சிகளின் நேர்மறையான தாக்கத்தையும் இது பிரதிபலிப்பதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவரும் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான மங்கள விஜேசிங்க இது குறித்து தெரிவிக்கையில்,
“இந்த வளர்ச்சி, இலங்கை உலக வர்த்தகத்தில் அதிகரித்து வரும் ஒருங்கிணைப்பையும், சந்தை வாய்ப்புகளை பன்முகப்படுத்துவதன் மூலம் ஏற்றுமதி போட்டித்தன்மையை வலுப்படுத்தும் அதன் முயற்சிகளின் வெற்றியையும் எடுத்துக்காட்டுகிறது.
மாறிவரும் உலக சந்தைக்கு ஏற்ப நமது ஏற்றுமதியாளர்களின் தகவமைப்புத் திறனை இது மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
ஓகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி வருவாய் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதுடன், முதல் எட்டு மாதங்களில் 11 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் தாண்டியுள்ளது.
உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் ஏற்றுமதியாளர்களின் தகவமைப்புத் திறனை இது பிரதிபலிக்கிறது.

You must be logged in to post a comment.