2025 வரவு செலவு திட்டம் – 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு 109 மேலதிக வாக்குகளால் இன்று (25) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இன்று பி.ப 6.10க்கு இடம்பெற்ற இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பில் வரவுசெலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 155 வாக்குகளும், எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
2025 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது ‘வரவுசெலவுத்திட்ட உரை’ நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் கடந்த 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெப்ரவரி 18ஆம் திகதி முதல் இன்று (25) வரை, 07 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) மீதான இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது.
இதற்கு அமைய குழு நிலை விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 19 நாட்கள் இடம்பெறவுள்ளது. இதற்கு அமைய 2025 ஆம் நிதியாண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு மார்ச் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

You must be logged in to post a comment.