3 ஆண்டுகளில் ஜேர்மனி, ஜப்பானை விஞ்சும் இந்திய பொருளாதாரம்!
மூன்று ஆண்டுகளில் இந்தியா உலகின் 3-வது பாரிய பொருளாதாரமாக வளரும் என நிதி ஆயோக் தலைவர் உறுதியளித்துள்ளார்.
இந்திய பொருளாதாரம் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஜேர்மனி மற்றும் ஜப்பானை மிஞ்சி உலகின் மூன்றாவது பாரிய பொருளாதாரமாக மாறும் என்று நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தியா உலகின் ஐந்தாவது பாரிய பொருளாதாரமாக உள்ளது. “அடுத்த ஆண்டின் முடிவில் நான்காவது இடத்தை எட்டுவோம். அதற்கடுத்த ஆண்டில் மூன்றாவது இடத்திற்கு வரும்,” என்று அவர் கூறியுள்ளார்.
IMF-இன் சமீபத்திய தரவுகளின்படி, தற்போது இந்திய பொருளாதாரத்தின் அளவு 4.3 டிரிலியன் டொலர் ஆகும். 2047-க்குள் இந்தியா 30 டிரிலியன் டொலர் அளவிலான இரண்டாவது பாரிய பொருளாதாரமாக மாறும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தியா, உலகிற்கு கல்வி மையமாக மாறும் திறன் கொண்டதாகவும், இதற்கான மிகப்பாரிய பலமாக ஜனநாயகம் இருப்பதாகவும் சுப்ரமணியம் வலியுறுத்தினார்.

இதேபோல், தற்போது நடுநிலை வருமான நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள், குறைந்த வருமான நாடுகளின் பிரச்சனைகளைவிட முற்றிலும் மாறுபட்டவையெனவும், இது உணவோ உடையோ குறைபாடு அல்ல, அறிவு அடிப்படையிலான பொருளாதாரமாக மாறுவது பற்றியது எனவும் அவர் கூறினார்.
இது இந்தியாவின் மிகப்பாரிய பலமாக இருக்கும் என சுப்ரமணியம் நம்பிக்கை தெரிவித்தார்.

You must be logged in to post a comment.