FeaturesLead NewsLocal

மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறியதும் போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்கவேமாட்டோம்! – அடித்துக் கூறுகின்றார் மஹிந்த

“நாம் மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறியதும் அரசியல் தீர்வு உட்பட வடக்கு, கிழக்குத் தமிழருக்குத் தேவையான அனைத்து விடயங்களையும் படிப்படியாக நிறைவேற்றியே தீருவோம். ஆனால், எந்தக் காரணம் கொண்டும் போர்க் குற்றவாளிகள் என்ற பெயரில் எவரையும் தண்டிக்கவேமாட்டோம். போருக்குத் தலைமை தாங்கிய இராணுவத் தளபதியை விரும்பிய தமிழர்கள், அந்தப் போரில் பங்கேற்று சுதந்திரத்தைப் பெற்றுத்தந்த படையினரை ஏன் வெறுக்கின்றார்கள்? அந்தப் போர் வீரர்களை ஏன் போர்க்குற்றவாளிகள் என்று அழைக்கின்றார்கள்?”

– இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச.

‘போர்க் காலத்தில் நடந்தவற்றைப் பேசிப் பயனில்லை. எத்தனை காலம் அதைப் பற்றிப் பேசுவது?. பேசிப் பேசி என்ன கிடைத்திருக்கின்றது?’ என்று மஹிந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே கிளிநொச்சியில் நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் போர்க்குற்றவாளிகளைத் தண்டிப்பீர்களா? என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பியபோதே மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி போர் நிறைவுக்கு வந்து ஒரு வருடம் முடிவதற்கு முன் 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி களமிறக்கிய பொதுவேட்பாளரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்கினார்கள். எனினும், அந்தத் தேர்தலில் அவர் படுதோல்வியடைந்தார். போருக்குத் தலைமை தாங்கிய இராணுவத் தளபதியை விரும்பிய தமிழர்கள், அந்தப் போரில் பங்கேற்று சுதந்திரத்தைப் பெற்றுத்தந்த படையினரை ஏன் வெறுக்கின்றார்கள்? அந்தப் போர் வீரர்களை ஏன் போர்க்குற்றவாளிகள் என்று அழைக்கின்றார்கள்? தமிழர்களின் இந்த வெறுப்பு எதற்காக என்று இன்னமும் எமக்குப் புரியவில்லை. ஆனால், தமிழர்களை நாம் மனதார நேசிக்கின்றோம்.

நாம் மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறியதும் அரசியல் தீர்வு உட்பட தமிழருக்குத் தேவையான அனைத்து விடயங்களையும் படிப்படியாக நிறைவேற்றியே தீருவோம். சிறைச்சாலையில் இருக்கும் அரசியல் கைதிகளுக்கும் விடுதலையைப் பெற்றுக்கொடுப்போம். எந்தக் காரணம் கொண்டும் போர்க்குற்றவாளிகள் என்ற பெயரில் எவரையும் தண்டிக்கவேமாட்டோம்.

போரின்போது படையினர் எவரும் போர்க்குற்றங்களைப் புரியவில்லை. அவர்கள், அப்பாவித் தமிழ் மக்களை விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்து காப்பாற்றி வடக்கு, கிழக்கு என்று ஒட்டுமொத்த நாட்டுக்கும் சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தார்கள்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading