LocalNorth

10ஆம் திகதி திருமணம்; மணமகள் நேற்று மரணம்! – மன்னாரில் துயரச் சம்பவம்

யாழ். போதனா வைத்தியசாலையில் தலையில் சத்திர சிகிச்சை செய்யப்பட்டு கோமா நிலைக்குச் சென்ற இளம் பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி நேற்றுத் திங்கட்கிழமை பிற்பகல் உயிரிழந்தார்.

மன்னார், தட்சணாமருதமடு – பாலம்பிட்டியைச் சேர்ந்த கைலாசபிள்ளை ஹேமா (வயது – 28) என்பவரே உயிரிழந்தவராவார்.

இவர் எதிர்வரும் 10 ஆம் திகதி திருமண பந்தத்தில் இணையவிருந்தார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

இந்நிலையில், தலையில் ஏற்பட்ட வலியைத் தொடர்ந்து மயக்கமடைந்த இவரை மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர்.

அங்கிருந்து அவர் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

தலையில் கட்டி ஒன்று இருப்பதைக் கண்டறிந்த வைத்தியர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சத்திரசிகிச்சை மேற்கொண்டனர். அதையடுத்து அவர் கோமா நிலைக்குச் சென்றார் எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், நேற்று பிற்பகல் அவர் உயிரிழந்தார் என வைத்திசாலைத் தரப்பு தெரிவித்தது.

மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவனத்தில் கல்வி பயின்ற இவர் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading