பிரதமர் பதவியை 71 தடவைகள் நிராகரித்தவன் நான்! குறுக்கு வழியில் முன்னேற விரும்பவில்லை என்கிறார் சஜித்!!
” குறுக்கு வழியில் உயர் பதவிக்கு முன்னேறுவதை ஒருபோதும் நான் விரும்புவதில்லை. எனவேதான், பிரதமர் பதவியை ஏற்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளைக்கூட 71 தடவைகள் நிராகரித்தேன்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாச இன்று( 18) தெரிவித்தார்.
ஐ. தே.கவின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாசவுக்கும் , உப தலைவரான ரவி கருணாநாயக்கவுக்குமிடையில் கடந்த சில நாட்களாக கடும் சொற்போர் நிலவி வருகின்றது. இருவரும் பொதுவெளியில் சரமாரியாக சொற்கணைகளை தொடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய தினமும் மோதல் போக்கு நீடித்தது. நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து கருத்து வெளியிட்ட அமைச்சர் சஜித்,
” கடந்துவந்த பாதையை மறக்கும் அரசியல்வாதி நான் அல்லன். இன, மத, குல பேதங்களுக்கு அப்பால் அனைத்து மக்களுக்கும் சேவையாற்ற தயாராகிவரும்வேளையில், சூழ்ச்சி செய்கின்றேன் என்று எனக்கெதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
கட்சிக்கோ அல்லது கட்சி தலைமைக்கு எதிராகவோ நான் ஒருபோதும் சூழ்ச்சி செய்தது கிடையாது. பிரதமர் பதவி குறித்து விடுக்கப்பட்ட கோரிக்கைகளைக்கூட 71 தடவைகள் நிராகரித்தவன் நான்.
அதற்காக உயர்பதவிகள் வேண்டாம் என நான் கூறவில்லை. மக்கள் ஆசியுடனேயே பதவிக்கு வர விரும்புகின்றேன். ” என்று கூறினார்.
