அடியோடு நிராகரிக்கப்பட்டது மைத்திரிபாலவின் கோரிக்கை! – நாளை கூடுகின்றது தெரிவுக்குழு
உயிர்த்த ஞாயிறு தினமன்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு இரத்துச் செய்யப்பட வேண்டும் என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கை அடியோடு நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே திட்டமிட்டபடி தெரிவுக்குழு அமர்வு நாளை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.
மேல்மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி மற்றும் காத்தான்குடி பள்ளிவாசல்களின் சம்மேளனப் பிரதிநிதிகள் ஆகியோர் தெரிவுக்குழு முன்னிலையில் நாளை சாட்சியமளிக்கவுள்ளனர்.
அதேவேளை, பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இருவர் விரைவில் சாட்சியமளிக்கத் தெரிவுக்குழுவால் அழைக்கப்படவுள்ளனர்.
முன்னதாக தெரிவுக்குழு இரத்துச் செய்யப்படும் வரை அமைச்சரவையைக் கூட்டப்போவதில்லை என்று கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

