EastLead NewsLocal

கன்னியாவில் விகாரை கட்டமாட்டோம்! – அமைச்சர் மனோவிடம் தேரர்கள் உறுதி

 

 

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயத்தின் அத்திவாரம் பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையில் இடிக்கப்பட்டமை தொடர்பில் சர்ச்சை நிலவியது. இது தொடர்பில் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் இன்று கன்னியா விஜயம் செய்து சந்திப்பு நடத்தியதில் வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயம் இருந்த இடத்தில் பெளத்த விகாரை கட்ட மாட்டோம் எனவும், தமிழ் பெளத்த வரலாறு இருப்பதை ஏற்றுக்கொள்கிறோம் எனவும் கன்னியா விகாரை தேரர்கள் உடன்பட்டனர்.

புராதன சிதைவுகளுக்கு சேதம் ஏற்படாத முறையில் கன்னியா வளவுக்குள் வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயம் அமைக்கவும், வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்தையும் புனரமைக்கவும் உடன்பாடு காணப்பட்டது.

இது தொடர்பான அடுத்தகட்ட கலந்துரையாடலை கொழும்பில் ஜனாதிபதி, பிரதமர், இந்து சமய , பெளத்த மத விவகார அமைச்சர்கள் கலந்துகொள்ளும் மட்டத்தில் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

கன்னியா விநாயகர், சிவன் ஆலய கட்டுமானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய அலுவல்கள் அமைச்சு வழங்கும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அமைச்சர் மனோ கணேசனுடன் சீ.யோகேஸ்வரன் எம்.பி., வேலுகுமார் எம்பி., சுசந்த புச்சிநிலமே எம்.பி., ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலாளர் ஜனகன், திருகோணமலை மாவட்ட செயலாளர் புஷ்பகுமார, கன்னியா விநாயகர் ஆலயம் சார்பாக கணேஷ் கோகிலரமணி, கன்னியா விகாரை தேரர்கள், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரசார செயலாளர் பரணிதரன் ஆகியோர் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர் கன்னியா வெந்நீர் ஊற்று வளவுக்குச் சென்று நேரடியாக ஸ்தலத்தைப் பார்வையிட்டு, சிவன் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட பூஜையிலும் கலந்துகொண்டனர். இதன்போது சி.சிறிதரன் எம்.பியும் அமைச்சருடன் இணைந்து கொண்டார்.

அவ்விடத்தில் அமைந்துள்ள பெளத்த விகாரைக்கும் அமைச்சர் மனோ கணேசன் சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading