Local

சரத் பொன்சேகாவும் போர்க்குற்றவாளியே! – விசாரணை நடத்துவதற்கு அவர் தயாரா என கஜேந்திரன் சவால்

“முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் ஒரு போர்க்குற்றவாளிதான். ஆனால், இன்று அவர் தன்னைப் பரிசுத்தமானவராகக் காட்டுவதற்கு முயல்கிறார்.”

– இப்படிக் கூறியுள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன்.

உண்மையில் போர்க்குற்றங்கள் என்ற கோணத்தில் விசாரணை நடத்துவதற்குப் சரத் பொன்சேகா தயாரா என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“இலங்கை நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரச மற்றும் எதிர்த் தரப்பினர்கள் இந்த நாட்டில் விசாரணைகளை நடத்தப் போவதில்லை என்று கூறுகின்றனர். அதேநேரம் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தன்னிடம் போர்க்குற்ற ஆதாரங்கள் உள்ளன என்றும், விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறுகின்றார்.

ஆனாலும், போர்க்குற்றம் என்ற கோணத்தில் விசாரணைகளை நடத்த பொன்சேகா தயாராக இருக்கின்றாரா என்ற கேள்வி எழுகின்றது. ஏனெனில், போர் நடைபெற்ற காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்தவரே அவர்தான். ஆகையால் அவ்வாறானதொரு விசாரணைகளுக்கு அவர் ஒருபோதும் ஒத்துழைக்கப்போவதில்லை.

ஆனாலும், அந்தப் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் சரத் பொன்சேகாவும் குற்றவாளியாகத் தண்டிக்கப்படுவார். ஆக அவரும் உண்மையில் அத்தகைய விசாரணைகளைக் கோரவோ அல்லது அதற்கு ஒத்துழைக்கவோ போவதில்லை. ஆனாலும், அவர் தன்னை பரிசுத்தமானவராகக் காட்டுவதற்கு முனைகின்றார்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading