புலிகள் மீளுருவாக்கம் வடக்குக்குள் இல்லை! – டி.ஐ.ஜி. தெரிவிப்பு
“தமிழீழ விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கத்துக்கான செயற்பாடுகள் எவையும் வடக்கில் இல்லை. வடக்கில் இடம்பெறும் ஒரு சில சம்பவங்களைத் தெற்கிலுள்ளவர்கள் பெரிதாகப் பார்க்கின்றனர்.”
– இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ.
காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரில் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கு மாகாணத்தின் சில இடங்களில் புலிகளின் கொடி மற்றும் சீருடைகள், துப்பாக்கிகள் மீட்கப்பட்டிருந்தன.
இதன்போது பலரைக் கைது செய்துள்ளோம். இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஏனையவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இவையெல்லாம் பெரிய விடயங்கள் அல்ல. அவை பெரிய பிரச்சினைகளுமல்ல.
வடக்கில் இடம்பெறும் இந்தச் சம்பவங்கள் தெற்கில் பெரிதாகப் பார்க்கப்படுகின்றன. ஆனால், இவையெல்லாம் சிறு பிரச்சினைகள்தான்.
அவற்றுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அந்த நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துக்கொண்டே வருகின்றோம். அந்த நடவடிக்கைகள் தொடரும்.
இந்த விடயங்கள் இங்கு சின்னப் பிரச்சினையாக இருக்கின்ற அதே நேரம் கொழும்பில் பெரிய விடயங்களாகப் பார்க்கப்படுகின்றன” – என்றார்.
