Lead NewsLocal

ராஜபக்ஷ குடும்பத்திலிருந்தே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு! – அவர் யார் என்று உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்கிறார் சமல்

“ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ராஜபக்ஷவின் குடும்பத்திலிருந்தே தெரிவு செய்யப்படுவார்.”

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்சவின் சகோதரரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ச தெரிவித்தார்.

“அவர் யார் என்று இப்போதைக்குக் கூற மாட்டோம். அவரின் பெயரைப் பொருத்தமான நேரத்தில் அறிவிப்போம்” எனவும் அவர் கூறினார்.

“ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் விவகாரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பங்காளிக் கட்சியாகக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் குழப்பம் ஏற்பட்டால் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஜனாதிபதி வேட்பாளர் தாமரை மொட்டுச் சின்னத்தில் (ஸ்ரீலங்கா பொதுமக்கள் முன்னணி) போட்டியிடுவார்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் ஆகியவற்றுக்கு முன் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அதனையே விரும்புகின்றார் போல் தென்படுகின்றது.

எனினும், ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டால் இரு பிரதான கட்சிகளுக்குள்ளும் வேட்பாளர் தெரிவின்போது குழப்பங்கள் ஏற்படக்கூடும்.

வேட்பாளர் தெரிவின்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள்ளும் குழப்பங்கள் ஏற்படக்கூடும். அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் குழப்பங்கள் குழப்பங்கள் ஏற்படக்கூடும்.

இதைக் கருத்தில்கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ராஜபக்ஷவின் குடும்பத்திலிருந்தே தெரிவு செய்யப்படுவார்.

அவர் யார் என்று இப்போதைக்குக் கூற மாட்டோம். அவரின் பெயரைப் பொருத்தமான நேரத்தில் அறிவிப்போம்.

வேட்பாளரின் பெயரை இப்போதே அறிவித்தால் வீண் பிரச்சினைகள் எழக்கூடும். சில பேர் இந்த விவகாரத்தை சுயநல அரசியல் பரப்புரைக்குப் பயன்படுத்தக்கூடும். இப்போதைக்கு நாம் அமைதியாக இருப்பதே சிறந்தது.

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் விவகாரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பங்காளிக் கட்சியாகக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் குழப்பம் ஏற்பட்டால் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஜனாதிபதி வேட்பாளர் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவார்.

தாமரை மொட்டுச் சின்னத்தை தன்னகத்தே கொண்டுள்ள ஸ்ரீலங்கா பொதுமக்கள் முன்னணி கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாபெரும் வெற்றியீட்டியமை எல்லோருக்கும் தெரிந்த விடயம். இந்தக் கட்சி எதிர்காலத்தில் எமது நிரந்தர கட்சியாகக்கூடும்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading