நல்லாட்சியின் சுயநலவாதிகளே நிறைவேற்று அதிகார ஒழிப்புக்கு எதிராகக் கூக்குரலிடுகின்றார்கள்! – போட்டுத் தாக்குகின்றது கூட்டமைப்பு
“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான நகர்வுக்கு நல்லாட்சி அரசைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றமை பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது. இது அவர்களது அதியுச்ச சுயநலத்தையும், சந்தர்ப்பவாதத் தன்மையையுமே வெளிப்படுத்துகின்றது.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இது குறித்து சுமந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில்,
“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான நகர்வுக்கு நல்லாட்சி அரசைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றமை பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது. இது அவர்களது அதியுச்ச சுயநலத்தையும், சந்தர்ப்பவாதத் தன்மையையுமே வெளிப்படுத்துகின்றது. சுமார் கால்நூற்றாண்டு காலமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்காக மக்களால் ஆணை வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த வாக்குறுதிகள் புறந்தள்ளப்படக்கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், அதன் தனிப்பட்ட அரசியல் நலன் நோக்கங்களுக்காக அன்றி, ஒரு கொள்கை என்ற அடிப்படையில் எந்த நேரத்திலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவு வழங்குவோம்” – என்று பதிவிட்டுள்ளார்.

