தமிழ்க் கூட்டமைப்பை கைவிட்டது ஐ.தே.க.! ‘ஒருமித்த நாடு’ கோரிக்கை ‘அவுட்’ !! ஒற்றையாட்சியே நீடிக்கும்!!!
புதிய அரசமைப்புக்கான வரைவில், ஒற்றையாட்சி அரசு என்ற பதத்தை மூன்று மொழிகளிலும் தெளிவாக குறிப்பிடுவதெனவும், பௌத்த மதத்துக்கான முன்னுரிமை தொடர்பான விடயங்களில் எந்த மாற்றங்களைச் செய்வதில்லை என்றும், ஐக்கிய தேசிய முன்னணி முடிவு செய்துள்ளது.
அலரி மாளிகையில் நேற்று ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடந்த ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கிடையிலான கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசியலமைப்பில், பௌத்த மதத்துக்கான முன்னுரிமை தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய, 9 ஆவது பிரிவில் எந்த மாற்றமும் செய்வதில்லை என்று இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பில், அரசு தொடர்பான பிரிவில், இலங்கை ஒரு ஒற்றையாட்சி அரசு என்று, சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் குறிப்பிடுவது என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கர்களைச் சந்தித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பௌத்த மதத்துக்கான முன்னுரிமை மற்றும் ஒற்றையாட்சி தொடர்பான விடயங்களில் எந்த மாற்றங்களும் செய்யப்படாது என்று உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒற்றையாட்சி என்பதை ஒருமித்த நாடு என மாற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது. இக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று கூட்டமைப்பு எம்.பிக்கள் திட்டவட்டமாக குறிவிட்டுவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
