Local

அனைத்து தடை உத்தரவுகளையும் நீக்கியது ஐ.தே.க

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தமையினால் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து தடைகளையும் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு நேற்று (16) மாலை கூடிய போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான நடவடிக்கை எடுப்பதில் ஏற்படக்கூடிய சட்ட பின்னணி குறித்து ஆராய முன்னாள் சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திலக் மாரப்பன தலைமையிலான குழுவை நியமிக்கவும் இதன்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு இந்த தீர்மானத்தின் ஊடாக மீண்டும் இணைந்து பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், அதன் தலைமையகமான சிறிகொத்தாவில் குறித்த செயற்குழுக் கூட்டம் நடைபெற்றிருந்தது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் பங்கேற்ற அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலான யோசனை ஒன்றும் இதன்போது நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading