அமெரிக்க அரசாங்கம் முடங்கியதாக அறிவிப்பு…!!!
நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான முரண்பாடுகள் காரணமாக அமெரிக்க அரசாங்கம் முடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் குடியரசு கட்சிக்கும் ஜனநாயக கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகள் காரணமாக நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்வதில் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.
குடியரசுக் கட்சி தற்போதைய நிதி திட்டத்தை ஏழு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆனால், ஜனநாயகக் கட்சி சில சலுகைகள் வழங்கப்படாமல் இதை ஏற்க மறுக்கிறது.
நடவடிக்கைகள் முடக்கம்
இதன் காரணமாக அமெரிக்க அரசாங்கம் முடக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுமார் 35 நாட்களுக்கு இவ்வாறு அமெரிக்க அரசாங்க நடவடிக்கைகள் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக இவ்வாறு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி தொடர்பான பிரேரணைகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த முடக்க நிலையானது அமெரிக்க அரசாங்கத்தின் பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளை பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியமான சேவைகளை இந்த முடக்க நிலை நேரடியாக பாதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் முரண்பாட்டு நிலைமை காரணமாக நிதி செலவிடுவது குறித்த பிரேரணைகளை நாடாளுமன்றில் நிறைவேற்ற முடியாவிட்டால், அரசு சட்டப்படி நிதி செலவிட முடியாது. அவ்வாறான நிலைமையே முடக்கம் என அழைக்கப்படுகின்றது.
இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பணிகள்
இந்த முடக்க நிலை காரணமாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பணிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக தூதரகத்தின் வழமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாது என்ற வகையிலான தகவல் ஒன்று இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்த எக்ஸ் கணக்கு அடிக்கடி இற்றைப்படுத்தப்பட மாட்டாது எனவும் அத்தியாவசியமான பாதுகாப்பு விடயங்களுக்கு மட்டுமே இந்த கணக்கு இற்றை படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கடவுச்சீட்டு மற்றும் விசா தொடர்பான சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment.