அமெரிக்க ஊடகங்களை கடுமையாக சாடும் ட்ரம்ப்!
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் குறித்து கசிந்த உளவுத்துறை மதிப்பீடு தொடர்பில் சில அமெரிக்க ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு டொனால்ட் ட்ரம்ப் கடுமையான கண்டனங்களை வெளியிட்டுள்ளார். “
வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இராணுவத் தாக்குதல்களில் ஒன்றைக் குறைத்து மதிப்பிட்டு காட்டும் வகையில் நாங்கள் முயற்சியில் தோல்வியடைந்ததாக சில ஊடகங்கள் இணைந்து போலிச் செய்திகள் வெளியிடுவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஈரானில் உள்ள அணு ஆயுத தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் தொடர்பான உளவுத்துறை மதிப்பீடு கசிந்ததால் அமெரிக்க நிர்வாகம் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளது.
குறித்த உளவுத்துறை மதிப்பீடு கசிவை, ஒரு தேசத்துரோக செயல் என்று தெரிவித்து ட்ரம்ப் நிர்வாகத்தின், மத்திய கிழக்கிற்கான சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் கடுமையாக கண்டித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், “இது மூர்க்கத்தனமானது, இது துரோகமானது, இவ்விடயம் விசாரிக்கப்பட வேண்டும். இதற்கு யார் பொறுப்பானவர்களோ அவர்கள் பொறுப்பேற்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஈரானில் ஏற்பட்ட அனைத்து சேதங்கள் தொடர்பான மதிப்பீட்டு அறிக்கைகளையும் தான் படித்ததாகவும், அமெரிக்கா தாக்கிய மூன்று அணுசக்தி நிலையங்களும் முழுதாக அழிக்கப்பட்டன என்பதில் சந்தேகமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
ஈரான் – ஃபோர்டோவில் 12 பதுங்கு குழிகள் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதலை மேற்கொண்டோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், ஈரானின் மூன்று முக்கிய அணு சக்தி தளங்களை அமெரிக்காவின் B-2 இராணுவ விமானங்கள் தாக்கின.
இருப்பினும், அந்த தாக்குதலில் ஈரானின் அணுசக்தி ஆயுதங்கள் அழிக்கப்படவில்லை என ஈரான் உட்பட பல்வேறு தரப்புக்களில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சற்று முன்னர் தனது சமூக ஊடக பக்கத்தில் ட்ரம்ப் இது தொடர்பிலான பதிவு ஒன்றையிட்டு காணொளி ஒன்றினையும் பகிர்ந்துள்ளார்.
குறித்த பதிவில், “நாங்கள் ஃபோர்டோவில் 12 பதுங்கு குழிகளை வெடிகுண்டுகளால் தாக்கினோம். இந்த தாக்குதலில் ஈரானிய அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எனவே, ஏதோ ஒரு வகையில் நாம் இலக்கை அடையவில்லை என்பதை போன்று வெளியாகும் செய்திகள் முற்றிலும் அபத்தமானவை” என குறிப்பிட்டுள்ளார்.

You must be logged in to post a comment.