இங்கிலாந்து முதியோர் இல்லங்களில் வசித்த ஆறாயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழப்பு

இங்கிலாந்து நாட்டில் சிறியதும், பெரியதுமாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியோர் பராமரிப்பு இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 200 இல்லங்கள் மருத்துவ வசதியுடன் கூடியவை.
இங்கு 4 லட்சத்துக்கும் அதிகமான முதியவர்கள் தங்கியுள்ளனர். இவர்களில் சுமார் 22 முதல் 25 சதவீதம் பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக, இங்கிலாந்தின் தேசிய புள்ளியியல் இலாகா அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றை வெளியிட்டது. அதில், ‘நாட்டின் முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கடந்த மாதம் 10ஆம் திகதி முதல் இந்த மாதம் 1ஆம் திகதி வரையிலான 21 நாட்களில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி 6,686 பேர் பலியாகி இருப்பதாக’ கூறப்பட்டுள்ளது.
இதனால், பராமரிப்பு இல்லங்களில் வசிக்கும் முதியவர்களுக்கு சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இங்கிலாந்தில் வலுத்துள்ளது.
