இந்தியா மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவோம் பாகிஸ்தான் அமைச்சர் தெரிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவோம் என்று பாகிஸ்தான் மத்திய அமைச்சர் சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் அணு ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்துவோம் என்றும், ஆனால் அந்த தாக்குதல் இஸ்லாமியர்களை காப்பாற்றும் வகையில் இருக்கும் என அந்நாட்டின் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் தெரிவித்துள்ளார், இந்நிலையில், சுதந்திரம் பெற்ற காலம் முதல் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தையும், 370 பிரிவையும் மத்திய அரசு நீக்கியது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தையும் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.
இந்த காஷ்மீர் விவகாரத்தை வைத்து தங்களது மக்களிடம் அரசியல் செய்து வந்த பாகிஸ்தான் அரசுக்கு இது பெரிய அடியாக விழுந்தது. இந்த கோபத்தில் சர்வதேச அமைப்புகளில் இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் பேசி வருகிறது. ஆனால் காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகளிடையே பாகிஸ்தானுக்கு போதுமான அளவு வரவேற்பு கிடைக்காத நிலையில் இந்தியா மீது அணு ஆயுதத்தாக்குதல் நடத்தப் போவதாக அந்நாட்டு அரசியல் தலைவர்கள் அச்சுறுத்தி வருகின்றனர். இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த ஆண்டு பல சந்தர்ப்பங்களில் பேசியுள்ளார். இந்நிலையில் இந்தியா மீது அணு ஆயுதத்தாக்குதலை நடத்துவோம் என அந்நாட்டு மத்திய அமைச்சர் ஷேக் ரஷீத் தெரிவித்துள்ளார். இது குறித்து பாகிஸ்தான் ஊடகத்திடம் பேசிய அவர், பாகிஸ்தான் இந்தியாவால் தாக்கப்பட்டால், வழக்கமான போரில் வெற்றி பெற எந்த வாய்ப்பும் இல்லை.
ஆனால் எங்களால் நடத்தப்படும் யுத்தம் ஒரு இரத்தக்களரி மற்றும் அணுசக்தி யுத்தமாக இருக்கும். சிறிய மற்றும் சரியான ஆயுதங்களை நாம் உருவாக்கி வைத்துள்ளோம். எங்கள் ஆயுதங்கள் இஸ்லாமியர்களை காப்பாற்றும். பாகிஸ்தானின் தாக்குதல் வரம்பில் இப்போது அசாமையும் உள்ளடக்கியுள்ளோம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
