Local

இன்று முதல் கொவிட் தொற்றாளர்களுக்கு வீடுகளில் சிகிச்சை!

வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறை காரணமாக பெருமளவில் அறிகுறிகள் தென்படாத COVID 19 தொற்றாளர்களை, வீடுகளிலேயே தங்கவைத்து சிகிச்சை அளிக்கும் முறைமை தொடர்பில் சுகாதார அமைச்சினால் அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நாளாந்தம் COVID 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், இன்று முதல் முன்னுரிமை அடிப்படையில் மாத்திரம் நோயாளர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பெரும் அளவில் பாதிப்புகள் இல்லாத, குறைந்தளவு அபாயம் உள்ள மற்றும் சிறியஅளவில் அறிகுறிகள் உள்ள நபர்களை வீடுகளில்தங்க வைத்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வீடுகளில் தங்க வைக்கப்படும் தொற்றாளர்களுக்கு,பரிசோதனைகளை மேற்கொண்டு அவர்களுக்கான உதவிகளை வழங்குவது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளின் பொறுப்பாகும் என சுகாதார அமைச்சுதெரிவிக்கின்றது.

அத்துடன், வீட்டில் தங்க வைக்கப்படும் நோயாளர்2 முதல் 65 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறந்த வசதிகளுடன் கூடிய அறை ஒன்றில் தங்கவைப்பதற்கு,ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொற்றினால் பாதிக்கப்பட்ட நபருக்கு,  நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம்,இருதய நோய், நுரையீரல் மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் போன்ற நாட்பட்ட நோய்கள் இருக்கக்கூடாது எனவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
அத்துடன் தனிமைப்படுத்தப்படும் அறையில் சிறந்த தொலைத்தொடர்பு வசதிகள் காணப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 24 மணித்தியால தொலைபேசி பிரிவொன்றை ஸ்தாபித்து, நோயாளர்களின் நாளாந்த நிலைமை குறித்து வைத்தியர் ஒருவர் ஊடாக பரிசீலிக்கப்பட வேண்டும்எனவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

அத்துடன் நோயாளர்களுக்கு மேலதிக சிகிச்சைகள் தேவைப்படும் எனில், உடனடியாக வைத்தியசாலைகளுக்கு அல்லது கோவிட் 19 சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என சுகாதார அமைச்சுமேலும் தெரிவித்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading