Local

இலங்கையின் முன்னாள் அமைச்சர் A H M பெளசிக்கு கடூழிய சிறைத்தண்டனை!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏ. எச். எம்.பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனையும் அதனை 10 வருட காலத்திற்கு ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று (27) உத்தரவிட்டுள்ளார்.

ஏ. எச்.எம் ஃபௌசி குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, அவரை குறித்த குற்றத்திற்காக குற்றவாளி என அறிவித்து நீதிபதி இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளார்.

அதேபோல், 4 இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

2010 இல், ஏ. எச். எம் ஃபௌசி அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக கடமையாற்றிய போது, ​​நெதர்லாந்திலிருந்து அமைச்சின் பேரிடர் முகாமைத்துவ நடவடிக்கைகளுக்காக கிடைத்த சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனத்தை தனது தனிப்பட்ட பாவனைக்காக பயன்படுத்தியமை, அதற்காக அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகளை ஈடுபடுத்தியமை மற்றும் வாகனத்தின் பராமரிப்புக்காக நிதியமைச்சின் சுமார் 10 இலட்சம் ரூபா பணத்தை செலவழித்தமை போன்ற 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஏ. எச். எம் ஃபௌசி தனது வழக்கறிஞர் மூலம் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதன்போது, 62 வருட அரசியல் அனுபவமுள்ள சிரேஷ்ட அரசியல்வாதி ஒருவர் இவ்வாறு செயற்படுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது எனவும், எனினும் அவர் முதல் சந்தர்ப்பத்திலேயே இலஞ்சம் வாங்கிய குற்றத்தை ஒப்புக்கொண்டதையும், தற்போது 86 வயதான முதியவர் என்பதையும் கருத்தில் கொண்டு குறைந்த பட்ச தண்டனை வழங்குவதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.

ஏ. எச். எம்.பௌசியின் கைரேகைகளைப் பெறவும் நீதிபதி இதன்போது உத்தரவிட்டார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading