Local

இலங்கையில் மூன்றில் ஒரு பகுதியினர் உணவு பற்றாக்குறையால் பாதிப்பு! ஐ.நா.தகவல்!

பொருளாதார சீர்திருத்தங்கள், மனித உரிமைகளை பாதுகாப்பதில் முன்னேற்றம் கண்டுள்ளமை தொடர்பில் சர்வதேச பங்காளிகளுக்கு காண்பிப்பதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையின் அடிப்படை சுதந்திரத்திற்கு மேலும் அச்சுறுத்தல்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் இலங்கையில் வறுமை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை மேற்கோள்காட்டி மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு அறிக்கை வௌியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரங்களின் பிரகாரம் இலங்கையில் மூன்றில் ஒரு பகுதியினர் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமையை ஆராய்வதற்கும் சாட்சியங்களை சேகரிப்பதற்கும் பல்வேறு முறைகளின் ஊடாக ஏற்பட்டுள்ள தடைகளை ஆராய்ந்து சர்வதேச சமூகத்தின் தலையீட்டிற்கான தற்போதைய பிரேரணையை புதுப்பிக்குமாறு மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் சபையின் உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் அமர்வில், தற்போதுள்ள தீர்மானத்தை புதுப்பிப்பதற்கு மேலதிகமாக இலங்கை தொடர்பில் புதிய தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading