இலங்கை அணியில் இருந்து விடைபெறும் பல மூத்த வீரர்கள்
உலகக் கிண்ண போட்டித் தொடரில் இலங்கை அணி படுதோல்விகளை சந்தித்திருந்த நிலையில், அணிமீது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அரசியல் தலையீடுகள் மற்றும் கடும் நெருக்கடிக்கு மத்தியில் உள்ள இலங்கை அணியில் இருந்து பல மூத்த வீரர்கள் விடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் இடம்பெற்றுவரும் உலக்கிண்ணத் தொடரில் பங்கு பற்றிய இலங்கை அணி 9 போட்டிகளில் 2 போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்றிருந்தது.
இலங்கை அணி சந்தித்த அனைத்து தோல்விகளும் படுதோல்விகளாகவே இருந்தன.
இந்நிலையில், இலங்கை அணி இன்று காலை இலங்கையை வந்தடைந்தது.
உலகக் கிண்ண அணியில் இடம்பெற்றுள்ள பல மூத்த வீரர்கள், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக அணிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து இவர்கள் ஏனைய வீரர்களுடன் ஆலோசித்து வருவதாகவும், தங்கள் முடிவை விரைவில் அறிவிக்க தயாராகி வருவதாகவும் இலங்கை கிரிக்கெட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் இவர்களை கடுமையாக பாதித்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
