World

எரிமலை வெடிப்பில் உருவான புதிய தீவு

ஜப்பானில் கடலுக்கடியில் உள்ள எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து கடற்பரப்பில் புதிதாக தீவு ஒன்று உருவாகியுள்ளது.

தெற்கு ஜப்பானில் ஐவோ ஜிமாவுக்கு ஒரு கிமீ தூரத்தில் உள்ள இந்தப் பெயரிடப்படாத எரிமலை மூன்று வாரங்களுக்கு முன்பாக வெடிக்கத் தொடங்கியது.

வெடிப்பு நிகழ்ந்த பத்து நாட்களுக்குள் எரிமலை சாம்பலும் பாறைகளும் ஆழமில்லாத கடற்பரப்பில் சேர்ந்து அதன் முனை கடலுக்கு மேலாக உயர்ந்து தீவு போல காட்சியளிக்கிறது.

நவம்பர் தொடக்கத்தில் உருவான இந்த நிலம், 100 மீட்டர் விட்டம் கொண்டதாகவும் 20 மீட்டர் உயரத்தோடும் எழுந்துள்ளது. ஆனால் இந்த தீவு இப்படியே நிலையாக இருக்காது எனத் தெரிவிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

“எரிமலை வெடிப்பு என்பது இந்தப் பகுதிகளில் அடிக்கடி நடப்பதும் தீவு போலான நிலம் உருவாவதும் குறிப்பிடத்தக்கது” என்கிறார் ஜப்பான் கடலியல்சார் ஆய்வு முகமையின் ஆராய்ச்சியாளர் யுஜீ உசாய்.

எரிமலை வெடிப்பு தணிந்த பிறகு உருவான இந்த நிலம், நிலைத்தன்மையாக இல்லாததால் எளிதில் அலைகளால் அடித்து செல்லப்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

சேர்மானம் குறித்தும் தீவின் வளர்ச்சி குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதற்கு முன்பும் இயற்கை பேரிடரினால் உலகில் பல இடங்களில் தீவுகள் உருவாக்கியுள்ளன.

2013இல் நிசினோஷிமா பகுதியில் பசுபிக் பெருங்கடலில் உள்ள எரிமலை வருடக்கணக்கில் வெடித்த துகள்களாலும் பாறைகளாலும் புதிய நிலம் உருவானது. அதே ஆண்டில் பாகிஸ்தானில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட போது புதிய நிலப்பரப்பு தென்பட்டது.

உலகம் முழுவதும் தற்போது 1500 எரிமலைகள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றில் 111 எரிமலைகள் ஜப்பானில் உள்ளன.

ஐவோ ஜிமா இரண்டாம் உலகப் போரின்போது புகழ்பெற்ற இடங்களில் ஒன்றாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2015ஆம் ஆண்டில், டோங்கா கடற்கரையில் எரிமலை ஒரு மாத காலம் வெடித்ததன் விளைவாக ஒரு புதிய தீவு உருவானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading