Lead News

இலங்கை குழந்தைகள் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்!!

நாடு முழுவதும் சுமார் 14,834 குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (28) நடைபெற்ற மாவட்ட பல்துறை போதைப்பொருள் தடுப்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு நிகழ்ச்சியில் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள்  திணைக்கள அதிகாரி ஒருவர் கூறியதாவது:

“குழந்தை உரிமைகள் மேம்பாட்டு அதிகாரிகள் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளுக்காகப் பணியாற்றி வருகின்றனர். பொலிஸ் நிலையங்களால் அடையாளம் காணப்பட்டு எங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட பல குழந்தைகள் உள்ளனர். ஆனால், மிகப்பெரிய பிரச்சனை எல்லா இடங்களிலும் ஒருங்கிணைப்பு இல்லாததுதான். குறிப்பாக, போதைப்பொருள் தொடர்பான விவகாரங்களில், அதிகாரிகளால் படோவிட்ட மற்றும் பிற பகுதிகளுக்கு செல்ல முடியவில்லை. குழந்தைகளை மீட்பது மட்டுமல்லாமல், குடும்பத்தை மையமாகக் கொண்ட பராமரிப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்கி, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பரிந்துரைக்கிறேன்.

“இந்நிகழ்வில் பேசிய பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால,

“பொலிஸ் கூறும் தகவல்களை யாரும் சென்று ஆராய்ந்து பார்ப்பதில்லை. அந்தக் கதையை நான் ஏற்கமாட்டேன். இந்த மக்கள் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். இதற்கு ஒரு சுழற்சி முறையிலான வேலைத்திட்டம் தேவை. இங்குதான் பாதாள உலகம் உருவாகிறது. 15 வயது சிறுவர்கள் கூட பாதாள உலகில் உள்ளனர். குழந்தைகள் பாடசாலைக்கு செல்லாதபோது, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அவர்களைக் கடத்துகின்றனர். நாட்டில் குழந்தைகளுக்காகப் பணியாற்றும் பல நிறுவனங்கள் உள்ளன. ஆனால், பிரச்சனையை அடையாளம் காண்பது மட்டும் போதாது; உரிய நடவடிக்கைகள் இல்லை. இதற்கு ஒரு குறிப்பிட்ட நிறுவனமும், நிதியும் தேவை. ஜனாதிபதியிடம் கோரினால், அவர் போதுமான நிதியை வழங்குவார்.” என்றார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading