World

இஸ்ரேலை வேரோடு பிடுங்குவோம் ஈரான் எச்சரிக்கை!

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா நினைவு கூட்டத்தில் கலந்து கொண்ட உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி சில பகீர் கருத்துகளைத் தெரிவித்தார். இஸ்ரேல் வேரோடு பிடுங்கப்படும் என்ற அவர், அமெரிக்கா இஸ்ரேலை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்துவதாக எச்சரித்தார்.

மத்திய கிழக்கில் இப்போது இஸ்ரேல்- ஈரான் இடையே நேரடியாகப் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு நடக்கும் ஒவ்வொரு விஷயமும் சர்வதேச அளவில் கவனம் பெறுகிறது.

இதற்கிடையே இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவுக்கு நினைவு கூட்டம் ஈரான் நாட்டில் நடைபெற்றது. இதில் ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி நேரடியாகக் கலந்து கொண்டார். கடந்த 5 ஆண்டுகளில் கமேனி பொது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுவது இதுவே முதல்முறையாகும். இதில் அவர் நேரடியாக இஸ்ரேல் நாட்டை எச்சரிக்கும் வகையில் பேசினார்.

தெஹ்ரானில் உள்ள ஒரு பள்ளிவாயலில் பல ஆயிரம் மக்களிடையே உரையாற்றிய காமேனி, பாலஸ்தீன மற்றும் லெபனான் இயக்கத்திற்கான ஈரான் ஆதரவை உறுதி செய்தார். ஈரான் நாட்டின் எதிரிகளை நிச்சயம் தோற்கடிப்பேன் என்று சபதம் எடுத்த அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதல்களை நியாயப்படுத்தினார்.

இஸ்ரேலை ஆக்கிரமிப்பு பாலஸ்தீனம் என்றே குறிப்பிட்ட கமேனி, தங்கள் நாட்டு மக்களைக் காக்கத் தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதலை நடத்தவும் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், ஹிஸ்புல்லா அமைப்பிற்கான ஆதரவு தொடரும் என்ற அவர், ஈரானும் அதன் நட்பு நாடுகளும் சேர்ந்து அதன் எதிரிகளை வீழ்த்தும் எனத் திட்டவட்டமாக அறிவித்தார்.

கமேனி மேலும் பேசுகையில், “கடந்தாண்டு அக். 7ம் திகதி நடந்த தாக்குதல் (இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல்) சரியான நடவடிக்கை தான். பாலஸ்தீனியர்களுக்கு இதைச் செய்ய உரிமை உண்டு. தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. அதேபோல அந்த ஆக்கிரமிப்பு தேசம் (இஸ்ரேலைக் குறிப்பிடுகிறார்) மீது நாங்கள் நடத்திய தாக்குதலிலும் எந்தவொரு தவறும் இல்லை.

பாலஸ்தீன முஸ்லிம்களுக்காக ஹமாஸ் போராடுகிறது. இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா போராடுகிறது. இந்த இரு அமைப்புகளுக்கும் நாங்கள் ஆதரவாகவே இருப்போம். நஸ்ரல்லா இப்போது உயிருடன் இல்லை. ஆனாலும், அவர் விட்டுச் சென்ற பாதை நமக்கு ஊக்கமளிக்கும். அவர் சர்வதேச அளவில் போற்றப்படும் ஒரு ஆளுமை. ஒடுக்கப்பட்டவர்களின் குரல். அவரது புகழ் லெபனான், ஈரான் மற்றும் அரபு நாடுகளைத் தாண்டியும் பரவியுள்ளது. இப்போது அவரது தியாகத்தால் அவரது செல்வாக்கு மேலும் வளரவே செய்யும்.

இப்போது உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைய வேண்டும். நமது பொது எதிரியை வீழ்த்த ஒன்று திரள வேண்டும். பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் உள்ள முஸ்லிம்களை இஸ்ரேல் தாக்குகிறது. அதைத் தடுக்கவே நாங்கள் அந்த யூத தேசத்தின் மீது தாக்குதல் நடத்தினோம்.

இஸ்ரேலின் உதவியுடன் இந்த பிராந்தியத்தில் உள்ள வளங்களை அமெரிக்கா தன்வசப்படுத்த முயல்கிறது. இஸ்ரேலை அமெரிக்கா ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது என்பதே உண்மை. தங்கள் ஏதோ பெரிய நாடாக இந்த யூத தேசம் நினைக்கிறது. ஆனால், உண்மையில் அந்த போலியான தேசம் வேரோடு பிடுங்கப்படும். நீண்ட காலம் தாங்காது. அது அமெரிக்கர்களின் ஆதரவினால் மட்டுமே உள்ளது” என்று மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading