Local

உணவுப் பற்றாக்குறையால் 27 கோடி மக்கள் பாதிப்பு!

உணவுப்பற்றாக்குறையால் 27 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மக்களுக்கு இடையேயான மோதல், காலநிலை மாற்றம் மற்றும் கோவிட் தொற்று காரணமாக உணவுப்பற்றாக்குறையால் 27 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச அளவில் வர்த்தகம் செய்யப்படும் சந்தைகளில், உலக உணவு விலைகள் ஜூன் மாதத்தில் ஆண்டுக்கு 33.9 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஐ.நா உணவு நிறுவனத்தின் விலைக் குறியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனான் நாட்டில் கோதுமை மாவின் விலை 219 மடங்கும், சிரியாவில் சமையல் எண்ணையின் விலை 440 மடங்கும் உயர்ந்து உள்ளது. 43 நாடுகளில் சுமார் 4.1 கோடி மக்கள் பஞ்சத்தின் அபாயத்தில் உள்ளனர், நான்கு நாடுகளில் கிட்டத்தட்ட 600,000 பேர் ஏற்கனவே பஞ்சம் போன்ற நிலைமைகளை அனுபவித்து வருகின்றனர்.

கோவிட் அவசரநிலை அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உலகளவில் பட்டினியால் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 11 பேர் பலியாகி வருவது தெரியவந்துள்ளது.

மேலும் உலகம் முழுவதும் 15.5 கோடி மக்கள் வறுமை காரணமாக போதிய உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள ஆய்வு முடிவானது உலகின் 10 பணக்காரர்களின் செல்வம் கடந்த ஆண்டு மட்டும் 41,300 கோடி அமெரிக்க டொலர்கள் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த ஆண்டு எத்தியோப்பியா, மடகாஸ்கர், தெற்கு சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளிலும், நைஜீரியா மற்றும் புர்கினா பாசோவிலும் பஞ்சம் போன்ற நிலைமைகள் உள்ளன, இதில் 584,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டு உள்ளது.   

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading