World

உலக சனத்தொகையில் இந்தியா முதலிடத்தைப் பிடித்தது!

ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) அமைப்பு 2023-ம் ஆண்டு உலக மக்கள்தொகையின் ஆய்வு தகவலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நடப்பு ஆண்டில் சீனாவின் மக்கள்தொகையை இந்தியா தாண்டி உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்தாண்டின் மத்தியில் இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை விட 30 லட்சம் கூடுதலாக இருக்கும்.

எனவே, தற்போதைய சூழலில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற பட்டியலில் முதலிடத்தை இந்தியா பிடித்ததாக ஐநா கணித்து கூறியுள்ளது.

இந்தியாவின் மக்கள்தொகை சுமார் 142.86 கோடி எனவும் சீனாவின் மக்கள்தொகை 142.57 கோடி என தோராயமாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பானது இறுதியாக 2011இல் எடுக்கப்பட்டது. அதன்பின்னர் 2021இல் எடுக்கப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு கொவிட்-19 காரணமாக தள்ளிப்போனது. எனவே, இந்திய மக்கள்தொகையின் உறுதியான அதிகாரப்பூர்வ எண்ணிக்கை தெரியவில்லை. எனவே, பல்வேறு தரவுகளை கணக்கில் கொண்டு இந்த முடிவை ஐநா வெளியிட்டுள்ளது.

அதேபோல, உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கை இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கொண்டுள்ளன. இருப்பினும் சமீப ஆண்டுகளாக இரு நாடுகளின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைவான வேகத்தில் உள்ளது. குறிப்பாக, சீனாவில் பல ஆண்டுகாலமாகவே மக்கள்தொகை வளர்ச்சியானது கணிசமாக குறைந்துள்ளது.

அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக விளங்கிய சீனா கடந்த 20 ஆண்டுகளாக மக்கள்தொகை கட்டுப்பாட்டிற்காக கடுமையான விதிகளை பிறப்பித்தது. ஒரு குழந்தைக்கு மேல் யாரும் பெறக் கூடாது என சட்டம் இயற்றிய சீனாவில் தற்போது இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. கட்டுபாடு காரணமாக மக்கள் தொகையில் சமம் இன்மை ஏற்பட்டுள்ளதால், மீண்டும் மக்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் ஏதுவாக சட்ட திட்டங்களை சீனா அரசு சமீபகாலமாக பிறப்பித்து வருகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading