LocalUncategorized

கழிவுப் பொருட்களால் மோட்டார் வாகனத்தை வடிவமைத்து கிளிநொச்சி இளைஞர் சாதனை

கழிவு பொருட்களைக் கொண்டு மோட்டார் வாகனம் ஒன்றை வடிவமைத்துள்ள கிளிநொச்சி இளைஞனின் முயற்சி தொடர்பில் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியில் வாழும் குறித்த இளைஞனின் நீண்ட நாள் முயற்சி அண்மையில் கணிசமான அளவு பூரணமடைந்துள்ளது.
குறித்த மோட்டார் வாகனத்தை செலுத்தக் கூடிய வகையில் தற்போது முன்னேற்றம் கண்டுள்ளார் குறித்த இளைஞன்.

நாட்டின் அபிவிருத்தி, உள்ளுர் உற்பத்திகளில் முக்கிய காத்திரமான பங்கு இளைஞர்கள் கரங்களில் உள்ளது.
நாட்டினை அபிவிருத்தி பாதைக்குள் அழைத்து செல்லவேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கானது என வெறுமனே வார்த்தைகளால் கூறி நாம் தப்பித்துக்கொள்ளாமல் அனைத்து பிரஜைகளின் கரங்களிலும் தங்கியுள்ளது என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும்.

கொரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழலை சாதகமாக பயன்படுத்தி, தனது திறமை, நீண்ட கால முயற்சி, சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் முழு மூச்சாக உழைத்து இன்று கழிவு பொருட்களைக்கொண்டு மோட்டார் வாகனம் ஒன்றினை வடிவமைத்துள்ள இளைஞனே இவர்.
இளைஞனின் இந்த வடிவமைப்புக்கு குடும்ப பொருளாதாரம் பாரிய தடையாக இருந்துள்ளது. எனினும் நீண்ட கால முயற்சியின் வெளிப்பாடாக இன்று இவ்வாறு மோட்டார் வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பழுதடைந்த மோட்டார் சைக்கிள் எஞ்சினை திருத்தி அதனை குறித்த வாகனத்திற்கு பயன்படுத்தியதுடன், கழிவாக வீசப்பட்டிருந்த வாகன பொருட்களையும் பயன்படுத்தியே குறித்த மோட்டார் வாகனத்தை வடிவமைத்துள்ளார்.
கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்ற அருள்தாஸ் றொசான் என்ற 20 வயதுடைய இளைஞன் சிறுவயதிலிருந்தே இவ்வாறான வடிவமைப்பு தொடர்பில் ஆர்வம் செலுத்தி வந்துள்ளதாக அவரது தாயார் தெரிவிக்கின்றார்.
குடும்ப பொருளாதாரம் பின்னிலையில் இருந்தபோதிலும், மகனின் முயற்சியை தட்டிக்கொடுத்ததாகவும் அவர் தெரிவிக்கின்றார். அதன் விளைவாக கிடைத்த இந்த வெற்றி தனக்கு மகிழ்வினை தருவதாக தெரிவிக்கும் தாயார், தான் பெருமை அடைவதாகவும் குறிப்பிடுகின்றார்.
குடும்ப பொருளாதாரம் இவரது முயற்சிக்கு நீண்ட கால தடையாக இருந்தபோதிலும், தாயாரின் ஒத்துழைப்பும், தட்டிக்கொடுத்தலும் இளைஞனின் இந்த வடிவமைப்புக்கு உந்து சக்தியாக அமைந்துள்ளது.

உயர்தர கல்வியை நிறைவு செய்ய குறித்த இளைஞன் தொழில் பயிற்சி நிறுவனத்தில் கல்வி கற்று வருகின்றார்.
குறித்த வடிவமைப்பின்போது பொருளாதாரம் சார்ந்த பல தடைகள் தனக்கு ஏற்பட்டதாகவும், வைத்தியசாலையில் நோயாளர்களை பராமரிப்பதன் ஊடாக கிடைக்கும் வருமானத்திலிருந்து குடும்ப செலவையும் பார்த்து எனக்கு சிறு சிறு தொகையை தாயார் வழங்கியதன் ஊடாகவே இன்று இவ்வாறான முன்னுற்றத்தை அடைந்துள்ளதாக அந்த இளைஞன் தெரிவிக்கின்றார்.
இவ்வாறான வடிவமைப்பு எமது நாட்டுக்கு ஏற்ற வகையில் உள்ளதாகவும், இதனை மாதிரியாக வைத்து வேறு வாகனங்களையும் வடிவமைக்க முடியும் எனவும் குறித்த இளைஞன் நம்பிக்கை வெளியிடுகின்றார்.
மிக குறைந்த செலவில் முச்சக்கர வண்டிக்கும் குறைவான தொகையில் இவ்வாறான வடிவமைப்பை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

தனது நண்பர்கள் பலரை ஏற்றியவாறு பயணித்தபோது 60 கிலோ மீட்டர் வேகத்தில் குறித்த வாகனம் பயணிப்பதாகவும் தெரிவிக்கும் இளைஞன். 500 கிலோ எடை வரை வாகனத்தில் ஏற்ற முடியும் எனவும் தெரிவிக்கின்றார்.
குறித்த வடிவமைப்பு 75 வீதம் பூரணமடைந்துள்ளதாகவும், வயரிங் உள்ளிட்ட சில வேலைகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

இதற்காக பழுதடைந்த நிலையில் காணப்பட்ட மோட்டார் சைக்கிளின் இயந்திரத்தையும், ஏனைய வாகன கழிவுகளையும் பயன்படுத்தியே இதனை வடிவமைத்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார். பொருளாதார தடை இல்லாதிருந்தால் குறித்த வடிவமைப்பை சில வருடங்களிற்கு முன்பாகவே முடித்திருப்பேன் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இதனை போன்று வடிவமைப்புக்களை தன்னால் மேற்கொள்ள முடியும் எனவும், அதற்கு உற்பத்தி நிறுவனங்கள் உதவினால் குறைந்த செலவில் இவ்வாறான உற்பத்திகளை மேற்கொள்ள முடியும் எனவும் குறித்த இளைஞன் நம்பிக்கை வெளியிடுகின்றார்.
குறித்த இளைஞனின் இந்த முயற்சி தொடர்பில் கண்டாவளை பிரதேச செயலாளர் தங்கவேலாயுதம் பிருந்தாகரன் நேரில் சென்று பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading