Local

காஸாவில் உள்ள இலங்கையர்கள் ஆபத்தில்!

பலஸ்தீனத்தின் காஸா பகுதியில் சிக்கியுள்ள இலங்கையர்களை விடுவிப்பதற்கான இராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், எகிப்தின் ரஃபா எல்லைக்குள் குடியேற்றவாசிகள் நுழைய அந்நாடு அனுமதி மறுத்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் காஸாவின் ஹமாஸ் இயக்கத்துக்கு இடையில் ஏற்பட்டுள்ள போரால் காஸா பகுதியில் வசித்து மற்றும் தொழில்புரிந்துவந்த பல இலங்கையர்கள் காஸாவைவிட்டு வெளியேற முடியாது தவித்து வருகின்றனர்.

காஸாவில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அவர்களை அங்கிருந்து வெளியேற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், இலங்கையர்களை எகிப்தின் ரஃபா எல்லையின் ஊடாக எகிப்துக்கு அழைத்துச் செல்லும் இராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பலஸ்தீனத்துக்கான இலங்கையின் தூதுவர் பென்னட் குரே, தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. செஞ்சிலுவை சங்கம் அவர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவை வழங்கி வருகிறது. ஆனால் இலங்கையர்கள் உணவு மற்றும் தண்ணீரைக் கேட்கவில்லை. விரைவில் தம்மை எகிப்துக்கு அழைத்து செல்லுமாறே கோருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் மிகத் தீவிரமான பதிலடியைக் கொடுத்து வருகிறது.

இஸ்ரேல் தனது அடுத்தடுத்த நகர்வுகளை மிகத் துல்லியமாகவும், அதிக விழிப்புடனும் எடுத்து வைக்கிறது. இதனால், இஸ்ரேலின் கோரத் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பு தங்களுடைய முக்கிய படைத் தளபதிகளை அடுத்தடுத்து இழந்து வருகிறது.

இஸ்ரேல் உடனான போரில் ஹமாஸ் படையின் அப்துல் ரஹ்மான், கலீல் மஹ்ஜாஸ், மற்றும் கலீல் டெத்தாரி ஆகிய மூன்று துணைத் தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது ஹமாஸ் அமைப்பின் புலனாய்வு பிரிவின் துணைத் தலைவர் ஷாதி பாரூத்தை இஸ்ரேல் பாதுகாப்பு படை கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஷாதி பாரூத் இதற்கு முன்னர், கான் யூனிஸ் என்ற பகுதியில் பட்டாலியன் குழுவை வழிநடத்தி வந்திருக்கிறார்.

அத்தோடு தீவரவாதக் குழுவின் உளவுத்துறையில் பல்வேறு பதவிகளை வகித்திருக்கிறார்.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த பல திட்டங்களை வகுத்து கொடுக்க உதவியிருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

போரில் இதுவரை இஸ்ரேல் மக்கள் 1400 பேர் உயிரிழந்துள்ளனர். 220 பேர் பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பிடம் உள்ளனர். இஸ்ரேல் நடத்தி வரும் பதில் தாக்குதலில் காஸாவில் 7028 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஹமாஸ் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading